இவ்வளவுக்கும் காரணம் திமுக, அதிமுக தான்!! அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு
போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் முறைகேடுகள் தான் காரணம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் தமிழகம் முழுதும் அரசு பேருந்துகள் இயங்காததால், பொதுமக்களும் பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று பார்வையிட்ட அன்புமணி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, போக்குவரத்து தொழிலாளர் சங்கங்களுடன் இதுவரை 22 முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்கியுள்ள தமிழக அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் 2.42 மடங்கு வழங்குவதாக கூறுகிறது.
போக்குவரத்து துறையில் அடிப்படை ஊதியம் 19,500 ரூபாய் கேட்டுட்டுள்ளனர், அரசு 16,300 ரூபாய் அளிப்போம் என்கிறது. அது மட்டும் அல்ல ரூ.4500 கோடி நிலுவையில் உள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இருகட்சிகளும் சேர்ந்து போக்குவரத்துத் துறையை நஷ்டமடைய செய்து தமிழகத்திற்கு பெரும் துரோகத்தை செய்துள்ளன.
போக்குவரத்து துறை 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. இதற்கு காரணம் அதில் நடக்கும் லஞ்சம், ஊழல் தானே தவிர வேறொன்றும் கிடையாது. தனியார் துறைகள் எல்லாம் லாபத்தில் இயங்குகிறது. ஆனால் அரசுதான் நஷ்டத்தில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் கௌரவம் பார்க்காமல், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார்.