அதிமுகவில் இருந்து விலகிய நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பலம் வாய்ந்து காணப்படுகிறது. இதில், அதிமுகவில் நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் நட்சத்திர பேச்சாளர்களாக வலம் வந்தனர்.
இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக அதிமுகவில் நட்சத்திர பேச்சாளராக இருந்த நடிகர் ஆனந்தராஜ் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகினார். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே அந்த கட்சியில் செயல்பட்டதாகவும் தெரிவித்தார். வேறு எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை என அவர் கூறினார்.

இந்நிலையில் ஆனந்தராஜ் வீட்டு தொலைபேசி, செல்போன் ஆகியவற்றில் தொடர்பு கொண்ட சிலர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்ப.மேலும் அவரது செல்போனுக்கு, கொலை மிரட்டல் விடுத்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் ஆனந்தராஜ், நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரிக்கின்றனர். இதைதொடர்ந்து நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகர் ஆனந்தராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் 12 ஆண்டுகளாக அதிமுகவில், நட்சத்திர பேச்சாளராக வலம் வந்தேன். பல தேர்தல்களில் காங்கிரஸ், திமுக தலைவர்களை பற்றி விமர்சனம் செய்து பேசி இருக்கிறேன். ஆனால், எனக்கு எந்த ஒரு அச்சுறுத்தலோ, கொலை மிரட்டலோ வந்தது கிடையாது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், எனக்கு அரசியலில் பிரவேசிக்க விருப்பம் இல்லை. அதனால், அதிமுகவில் இருந்து விலகினேன். ஆனால், என்னை அதிமுகவில் இருந்து விலக கூடாது என கூறி தொலைபேசியிலும், செல்போனிலும் சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றேன்.
அதுயார் என்று போலீசாருக்கும் தெரியும், அதிமுக நிர்வாகிகளுக்கும் தெரியும். அவர் அதிமுகவின் தொண்டராக இருந்தால், அவர் மீது மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுகவில் இருந்து விலகிய நடிகர் ஆனந்தராஜிக்கு தொலைபேசி மற்றும் செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழ் திரைப்பட நடிகர்,நடிகைகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகை விந்தியா, கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
