தில்லு முல்லு கழகம் தான் திமுக..!! மக்கள் புரிஞ்சுக்குற நேரம் வந்தாச்சு.. டிவிஸ்டு வைக்கும் டிடிவி..
நகைக்கடன் உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள் என்று திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் டிடிவி தினகரன்.
தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை சில தகுதியின் கீழ் உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் என்ற ஒரு அறிவிப்பை நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய நகைக்கடன்களை இறுதி செய்யும் பணி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மேலும், ஒரு அதிர்ச்சி தகவல்கள் அந்த சுற்றறிக்கையில் இடம் பெற்றுள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஏற்கனவே 2021ம் ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும் இந்த நகைக்கடன் தள்ளுபடி என்பது செய்யப்படாது என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தியவர்களுக்கும் இந்த தொகை திரும்ப வழங்கப்படாது என்ற ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகைக்கு கீழ் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யபடும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கூட்டுறவு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 20 சதவீதம் பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்றிருந்தால் நகை கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்றும் நகை கடன் தள்ளுபடி தொடர்பான கள ஆய்வு சேலம் மாவட்டத்தை தவிர பிற மாவட்டங்களில் முடிந்து உள்ளது என்றும் கூட்டுறவு துறை விளக்கம் அளித்துள்ளது.
இதில் 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்றவர்கள் ,குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள், குடும்ப அட்டை எண்ணை தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள், தவறாக வழங்கியவர்கள், எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு நகைக்கடன் சலுகை கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். அதில், ‘தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்' என்று பதிவிட்டுள்ளார்.