பெண்ணை ஏமாற்றியவர் வக்ஃபு போர்டு சேர்மனா!: அல்லாவும் மன்னிக்கமாட்டார், அம்மாவும் மன்னிக்கமாட்டார்!
வக்ஃபு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர் ராஜாவுக்கு நிறைய விமர்சனங்களும், குறைவாக வாழ்த்துக்களும் குவிந்து கொண்டுள்ளன. அதிலும் அன்வரின் மகன் நாசர் மீது ‘திருமண மோசடி’ புகார் சொன்ன ரெபீனா விட்டிருக்கும் சாபம் அலற வைக்கிறது அன்வரை.
வக்ஃபு வாரியத்தின் தலைவராக கடந்த சில ஆண்டுகளாக இருந்தார் தமிழ்மகன் உசேன். அவரது பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் அப்பதவிக்கு தேர்தல் நடத்திட அரசு முடிவு செய்தது. ஆனால் ஜெ மரணத்துக்குப் பின் தமிழ்நாட்டில் குச்சி மிட்டாய் வாங்க வேண்டுமென்று அரசு விரும்பினாலும் கூட அதில் நடக்கும் குண்டக்க மண்டக்க கூத்துக்களை பற்றி மக்களுக்கு தெரியாததில்லை. ஆக இந்த தேர்தலை நீண்ட இழுபறி, இம்சைகள், முயற்சிகளுக்கு பின் நேற்று நடத்தினர். பெயர்தான் தேர்தலே தவிர மற்றபடி வெற்றி வேட்பாளரை ஆளும் அ.தி.மு.க. ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. அது அன்வர் ராஜா எம்.பி.தான். இதில் முன்னாள் தலைவரான தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் முஸ்லீம் முக்கியஸ்தர்கள் பலருக்கு ஏக கடுப்பு.
வாழ்த்துக்கள், முணகல்களுக்கு நடுவில் அன்வர் தலைவராக தேர்வானார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று தனக்கெதிரான விமர்சனங்களை அன்வர் அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில்தான் அவரே எதிர்பாராத அட்டாக் ஒன்று நடந்தது. அது...
சில வாரங்களுக்கு முன் அன்வர்ராஜாவின் மகன் நாசர் அலிக்கு திருமணம் நடந்தது. அப்போது திருமண மண்டபத்தின் சுவர் ஏறி குதித்து ‘என்னை நாசர் அலி ஏமாற்றிவிட்டார்’ என்று ஒரு பெண் பிரச்னை செய்தாரே அவர், தேர்தல் நடந்த இடத்துக்கு வந்தார். அவரை அன்வரின் ஆட்கள் அப்புறப்படுத்தினர்.
அதன் பிறகு தன் விமர்சன மழையை பொழிய துவங்கி ரெபீனா...”என்னை அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி ‘திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று சொல்லி நெருங்கிப் பழகினார். என்னையும், என் பணத்தையும் அவரிடம் இழந்தேன். நாசர் என்னுடன் நெருக்கமாக இருந்தது அவரது அப்பா அன்வர் ராஜாவுக்கு நன்றாக தெரியும். சென்னைக்கு வரும்போது பல நேரங்களில் நாசர் எங்கே இருக்கிறார் என்று அன்வர் ராஜா என்னிடம் தான் கேட்டு தெரிந்து கொள்வார். என்னை மருமகளாகதான் ஏற்று பேசினார்.
இந்நிலையில்தான் பணம் மற்றும் பல ஆதாயங்களுக்காக வேறு ஒரு பெண்ணை மகனுக்கு மணமுடித்து வைத்துவிட்டார். திருமணத்தன்று என் போராட்டத்துக்கு பயந்து திருமண இடத்தையே மாற்றி ஓடி, ஓடி மறைந்தேதான் நிக்காஹ் நடத்தினார்கள். தன் அதிகாரத்தை வைத்து என் நியாயத்தை நசுக்கினார் அன்வர் ராஜா.
அப்பேர்ப்பட்டவர் வக்ஃபு போர்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெரும் அவலம். அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் பெண்களின் நிலை என்னவாகும் என கொஞ்சம் யோசியுங்கள். இவரை அல்லாஹ் எனும் இறைவனும் மன்னிக்க மாட்டார், இவரது கட்சியின் தலைவியான அம்மாவின் ஆன்மாவும் மன்னிக்காது.
அன்வர் பதவியை உடனே பறிக்க வேண்டும்.” என்று கொதித்துள்ளார்.
ரெபீனாவின் இந்த அட்டாக், அன்வர்ராஜாவை அலறாவிட்டுள்ளது. பர்ஷனல் பாதையில் தன்னை டேமேஜ் செய்து வந்த ரெபீனா இப்போது தன் அரசியல் வழியிலும் மறியல் செய்வதால் தலையில் கை வைத்துவிட்டார். இந்நிலையில் அன்வர்ராஜாவின் புதிய பதவியின் மீது கடுப்பாகியிருக்கும் அ.தி.மு.க. புள்ளிகள் சிலர் ரெபீனாவுக்கு முழு சப்போர்ட்டை திரைமறைவில் கொடுக்க துவங்கியுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை விட மிக இளம் பெண்ணை திருமணம் செய்து கடும் விமர்சனத்துக்கு ஆளான அன்வர் ராஜாவுக்கு ரெபீனா புதிய மற்றும் இடி தலைவலிதான் போல.