amith sha may be handle operation kamala today
கர்நாடகச் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில், ‘ஆபரேஷன் கமலா’வை பாஜக கையில் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில் பாஜ 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் 78 இடங்களையும், மஜத 37 இடங்களையும் பிடித்தது.

இதையடுத்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியைக் கைப்பற்றி, எடியூரப்பா முதலமைச்சரானார். ஆனால் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதால் பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதளம் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார்.
இதையடுத்து கர்நாடகத்தில் 24-வது முதல்வராக ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமி நேற்று பதவி ஏற்றார். சட்டப்பேரவையில் நாளை தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை பாஜக ‘ஆபரேஷன் கமலா’ மூலம் எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் அச்சத்தில் உள்ளன..
இதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 9 நாட்களாக தங்கள் குடும்பத்தினரைக் காண முடியாமல் எம்எல்ஏக்கள் ஹோட்டலில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால், மனவேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு புறநகரில் உள்ள கோல்ஃப்ஷையர் ரிசார்ட்டிலும், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஹில்டன் எம்பஸி கோல்ஃப்லிங்கிலும் தங்கியுள்ளனர்.

இன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில்தான் தங்கி இருப்பார்கள் என்றும் , அதன்பின் அவர்கள் வீட்டுக்கும், தொகுதிக்கும் அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சிவகுமார் தெரிவித்தார். அதே நேரத்தில் எம்எல்ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை என்றும் சட்டவிரோதமாக அடைத்து வைக்கவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இத்தனை முன்னேற்பாடுகள் செய்திருந்தும் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அணி மாறி போய் விடுவார்களோ என்ற அச்சத்தை ஆப்ரேஷன் கமலா ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பன சூழ்நிலையில் இன்று குமாரசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
