அபாயின்மெண்ட் இருந்தும் அசிங்கப்பட்ட தமிழக எம்.பிக்கள். தொலைபேசியில் கெஞ்சிய டி.ஆர் பாலு.. 'நோ' சொன்ன அமித்ஷா.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் நீங்கள் எம்பிக்கள் ஆக இருக்கலாம், ஆனால் உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக அப்பாயின்மென்ட் இருக்க வேண்டும். எனவே புரோட்டோகால் படி உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்தனர். தமிழ்நாடு எம்பி களின் கார்கள் அமித்ஷா அலுவலகத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது.
நீட் விலக்கு குறித்த மனுவை அளிக்க முறையாக அப்பாயின்மென்ட் இருந்தும் தமிழக எம்பிக்களை சந்திக்க அனுமதிக்காமல் உள்துறை அமைச்சர் அமித்ஷா அலைக்கழித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக- திமுக என தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களும் கூட்டாக அவரை சந்திக்க முயற்சித்தும் அமித்ஷா சந்திக்க அனுமதி மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக எம்பிக்கள் பல மணி நேரம் அமித்ஷாவின் அலுவலக வாசலிலேயே காத்திருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் நீட் தேர்வை கொண்டு வந்தது முதல் தமிழக அரசு அதை கடுமையாக எதிர்த்து வருகிறது. மற்ற எல்லா மாநிலங்களும் நீட்தேர்வை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், தமிழக மாணவர்கள் அத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்கொலையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்வு தமிழக ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பறிக்கிறது எனக்கூறி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்றியதுடன், அதற்கான மசோதாவை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது அந்த மசோதா ஆளுநரின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இதேபோல் மற்றொரு பக்கம் அதிமுக- திமுக மற்றும் கம்யூனிஸ்ட் எம்பிகள் என தமிழக எம்பிக்கள் கூட்டாக இது தொடர்பாக மனு அளிக்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று, குடியரசுத் தலைவரை சந்திக்க முயன்றனர்.
ஆனால் அப்போது கொரோனா தொற்றை காரணம் காட்டி குடியரசுத் தலைவரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியரசுத் தலைவரின் தனி செயலாளரிடம் தமிழக எம்பிக்கள் மனுவை கொடுத்துவிட்டுத் திரும்பினர். இந்த குழுவில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் கூட்டாக இடம்பெற்றுள்ளனர். குடியரசு தலைவரை சந்திக்க முயன்ற அதே செவ்வாய்க்கிழமை பகல் 12 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க . டி ஆர் பாலு எம்.பி ஏற்கனவே அப்பாயின்மென்ட் பெற்றிருந்தார். அதன் அடிப்படையில், நேராக தமிழக எம்பிக்கள் கூட்டாக அமித்ஷாவின் அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அப்போது அமித்ஷா அலுவலகத்தில் இல்லை. மாறாக அவர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடித்து திரும்பி வந்து கொண்டிருக்கிறார் என கூறப்பட்டது.
இதனால் கிட்டத்தட்ட 2மணி நேரம் அவரது அலுவலக வாசலில் காத்திருந்த தமிழக எம்பிக்கள் அமித்ஷா வராததால் அங்கிருந்து டி.ஆர் பாலுவின் இல்லத்திற்கு உணவு சாப்பிட சென்றனர். பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் அமித்ஷாவை சந்திக்க அவரின் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அப்போதும் தமிழக எம்பி களை சந்திக்க அவர் மறுத்ததாக தெரிகிறது. அதற்கு சரியான காரணமும் அப்போது கூறப்படவில்லை. ஏற்கனவே நான்கு மணிக்கு திட்டமிட்டு இருந்த மீட்டிங் காரணமாக இந்த சந்திப்பை அவர் தவிர்த்ததாக பின்னர் கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த தமிழக எம்பிக்கள் ஏற்கனவே முறையாக அப்பாயின்மென்ட் பெற்று தானே சந்திக்க வந்தோம், அனைத்துக் கட்சி எம்பிக்களும் கூட்டாக வந்தும் இப்படி அவர் சந்திக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என கோபமடைந்த தமிழக எம்பிக்கள். மறுநாள் அப்பாயின்ட்மென்ட் கேட்டு விட்டு அங்கிருந்து திரும்பினார். ஆனால் மறுநாள் புதன்கிழமையும் அமித்ஷாவை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்படவில்லை. அப்பாயின்மென்ட் இல்லை என்றாலும் நேராக சென்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என எம்பிக்கள் குழுவாக அமித்ஷா அலுவலத்திற்கு சென்றனர்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் நீங்கள் எம்பிக்கள் ஆக இருக்கலாம், ஆனால் உள்துறை அமைச்சரை சந்திக்க வேண்டும் என்றால் முறையாக அப்பாயின்மென்ட் இருக்க வேண்டும். எனவே புரோட்டோகால் படி உள்ளே அனுமதிக்க முடியாது என மறுத்தனர். தமிழ்நாடு எம்பி களின் கார்கள் அமித்ஷா அலுவலகத்தின் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. சிறிது நேரத்தில் மொத்தமாக திருப்பி அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு சந்திக்க பத்து நிமிடமாவது நேரம் ஒதுக்க வேண்டுமென அமித்ஷாவிடம் டி. ஆர் பாலு போன் செய்து பேசியதாக தெரிகிறது. ஆனால் அவர் 10 நிமிடம் கூட ஒதுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் தமிழக எம்பிக்கள் இரவு 8: 40 மணி வரை அவரின் அலுவலகத்தின் முன்பு காத்திருந்தனர். ஆனால் கடைசிவரை அமிர்ஷா தமிழக எம்பி களை சந்திக்க முன்வரவில்லை. இதனால் கொதித்துப் போன தமிழக எம்.பி டி.ஆர் பாலு, இதுதான் புரோட்டோ காலா மக்கள் பிரச்சினையை கூட பேச நேரம் ஒதுக்க முடியாதா என்று உதவியாளரிடம் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
தமிழக எம்பிக்கள் கூட்டாக சென்றும், நீட் விலக்கு தொடர்பாக ஒருமித்த குரலுடன் மனு கொடுக்க சென்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்துவருவது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக- திமுக என அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம், ஆனால் 2 நாட்களாக அமைச்சர் சந்திக்க மறுக்கிறார் என ஒட்டுமொத்த தமிழக எம்பிக்களும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் அமித்ஷாவை சந்திக்க எம்பிகள் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.