#BREAKING அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
சென்னை அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினசரி பாதிப்பு 2000ஐ தாண்டி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் காலம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாகவே உடல் வலி, சளி இருந்ததையடுத்து திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானதையடுத்து வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, அழகாபுரம் தொகுதி மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, அண்ணா நகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ், குறிஞ்சிபாடி தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.