t.t.v.dinakaran News on the Pera Case
அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும், ஒருவருக்கொருவரை எப்படி காலி செய்வது என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக பொது செயலாளராக சசிகலா தேர்வு செய்தது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தேர்தல் ஆணையம், ஜனாதிபதி ஆகியோரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து அந்த மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், சசிகலாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதற்கு சசிகலா தரப்பில் அளிக்கப்பட்டது.. ஆனால், அந்த பதில் சரிவர ஏற்புடையதாக இல்லை என கூறப்பட்டது. இதனால், மீண்டும் பதில் மனுவை சசிகலா அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதீயை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அதிமுகவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து அடிப்படை உறுப்பினராக இருந்தால், மட்டுமே கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு தேர்வு செய்ய முடியும். அதிலும் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய வேண்டும்.
பொது செயலாளர் பதவிக்கு முறைப்படி தேர்தல் அறிவிக்க வேண்டும். அதில், வேட்புமனுக்கள் பெறப்பட்டு, போட்டி இருந்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால், ஒருமனதாக பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம்.
ஆனால் ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி மீண்டும் சேர்த்து 5 ஆண்டுகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாகவில்லை. எனவே அவர் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது நிச்சயமாக செல்லாது.
மேலும், தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பொறுப்பே கட்சியில் கிடையாது. அந்த வகையில் பொதுக்குழு கூடி பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது கட்சி சட்டவிதிகளில் இல்லை. பொதுச்செயலாளருக்கு அடுத்ததாக அவைத் தலைவர் இருக்கிறார். அவருக்கே, முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அதேபோல் தற்போது அதிமுக துணை பொது செயலாளராக கூறியுள்ள டி.டி.வி.தினகரன், ஆர்கே. நகர் தொகுதி இடை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் மீது ஏற்கனவே பெரா வழக்கு உள்ளது.
இதனால், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
எங்களது அணிதான் உண்மையான அதிமுக. எங்களது சின்னம் இரட்டை இலை. எனவே இந்த தேர்தலில், இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இதற்கான மனுவை வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க இருக்கிறோம்.

