இதெல்லாம் அப்பட்டமான அநீதி... முதல்வர் தலையிட்டே ஆக வேண்டும்... படபடக்கும் மு.க.ஸ்டாலின்..!
மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டிருந்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், தற்போது வெறும் 6,000 ரூபாய் கூடப் பெறமுடியவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
ஸ்விக்கி நிறுவனத்தின் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களின் ஊதியக்குறைப்புப் பிரச்சினையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வீட்டிற்குள் அடைபட்டிருக்கும் மக்களின் வயிற்றுப் பசியாற்றிய ஊழியர்களின் போராட்டத்தை 'ஸ்விக்கி' நிறுவனமும், தமிழக அரசும் கண்டு கொள்ளாமல் இருந்தது கண்டனத்திற்குரியது. மாதம் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டிருந்த ஸ்விக்கி உணவு விநியோக ஊழியர்கள், தற்போது வெறும் 6,000 ரூபாய் கூடப் பெறமுடியவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
உயிரைப் பணயம் வைத்து பணியாற்றும் ஊழியர்களுக்கு, அந்தப் பணிக்குரிய சம்பளத்தை வழங்க 'ஸ்விக்கி' நிறுவனம் மறுப்பதும், அதை குறைத்ததும் அப்பட்டமான அநீதி. இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு, ஸ்விக்கி ஊழியர்களையும், நிறுவனத்தையும் அழைத்துப் பேசி, ஊழியர்களின் ஊதியப் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும்’’அவர் தெரிவித்துள்ளார்.