தமிழகத்தில் 10 ஆண்டுகளில் நடக்காத வேலைகள் எல்லாம் 4 மாதங்களில் நடந்துள்ளது... அசால்ட் காட்டும் அமைச்சர்.!
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்யாத பல பணிகளை திமுக அரசு 4 மாதங்களில் செய்திருக்கிறது என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான தேர்தல் முடிந்த பிறகு, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலை 4 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக நகராட்சிகள், மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு வார்டு வரையறைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராகவே உள்ளது. அதற்கான அறிவிப்பைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார். தேர்தல் நடைபெறும் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்யாத பல பணிகளை திமுக அரசு 4 மாதங்களில் செய்திருக்கிறது. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்குகளைச் சேகரிப்போம். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை திமுக கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றும்” என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.