கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல; எண்ணற்ற சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம், பல தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். இன்று அரசியலின் மையப்புள்ளி நம் தலைவர் தான் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் மாமல்லபுரத்தில் தொடங்கியது. 40 நாட்களுக்குப் பின்னர் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் கலந்து கொள்கிறார். கரூர் கோரச்சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் பங்கேற்கும் முதல் கூட்டம் இது. இந்த கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொது குழுவில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கரூர் மாவட்ட செயலாளர் இந்த முதல் தீர்மானத்தை வாசித்தார். மேடையில் ஏறிய கரூர் மாவட்ட செயலாளர் மதியழகனை ஆரத்தழுவி விஜய் வரவேற்றார். கரூர் சம்பவம் நிகழ்ந்த உடன் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு ஆளாகப்பட்டவர் இந்த மதியழகன். பல்வேறு சிக்கல்களுக்கு ஆளான மதியழகன் நீதிமன்ற காவலுக்கு பிறகு ஜாமினில் வெளிவந்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை விவகாரத்தில் திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கைது விவகாரத்தில் கடிதம் மட்டுமே எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் திமுக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் கைதுக்கு கண்டனம் தெரிவித்து பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மழையில் நனையும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைவரை காண வரும் பொதுமக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் தமிழக அரசு, முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய் தலைமையில் 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திப்பது என்றும் தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளும் எடுக்கும் முழு அதிகாரத்தை கழகத் தலைவர் அவர்களுக்கு வழங்கிட பொதுக்குழு ஒப்புதல் அளிக்கிறது என 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.