திமுகவில் மீண்டும் அஞ்சா நெஞ்சன் அழகிரி..?? இளைஞர் அணியில் துரைக்கு பதவி..?? உடைக்கும் ரவீந்திரன் துரைசாமி.
பல ஆண்டுகளாக இருந்து வந்த மோதலை மறந்து அழகரி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நிலையில் பிரச்சனை முடிந்தது, அழகிரி திமுகவில் இணையப் போகிறார் என்று அன்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒராண்டு நெருங்கியுள்ள நிலையில், அழகிரி கட்சியில் இணைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை
.
மீண்டும் திமுகவில் மு.க அழகிரி இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். அதே நேரத்தில் தனது அண்ணனுக்கு உரிய மரியாதையை கட்சிக்காரர்களும், அரசு அதிகாரிகளும் கொடுக்கவேண்டும் என்பதை அவர் சூசகமாக வலியுறுத்துவதற்காக தான் அடிக்கடி தன் சகோதரர் அழகிரியின் பெயரை ஸ்டாலின் உச்சரித்து வருகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் தென்மாவட்ட திமுகவை மொத்தமும் தன் கையில் வைத்திருந்தவர் மு.க அழகிரி, ஆனால் அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதலில் கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவுக்கு எதிராக செயல்பட்டதாக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கப்பட்டதன் பின்னணியில் ஸ்டாலினின் சதி இருக்கிறது என்று அப்போது அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் கூறிவந்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நாள் முதல் கட்சிக்கு எதிராகவும், ஸ்டாலினுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் அழகிரி. மு.க ஸ்டாலின் அழகிரி மோதல் என்பது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே தொடங்கிய பனிப்போராக இருந்து வருகிறது. தன் தந்தை கருணாநிதி இருந்தவரை அழகிரி மீண்டும் கட்சியில் இணைய எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தலைமையின் கீழ் திமுக வந்தது. அப்போதே மீண்டும் கட்சியில் சேர்வோம் என்று அழகிரிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அற்றுப் போனது.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ரஜினியுடன் அழகிரி இணையபோகிறார் என்று தகவல்கள் பரபரத்தன, பிறகு பாஜகவின் அவர் இணையபோகிறார் என்றும் கூறப்பட்டது. இல்லை இல்லை அவர் தனியாக கட்சி தொடங்கப் போகிறார் என்று செய்திகள் உலா வந்தன. அதற்கேற்றார்போல் மதுரையில் தனது ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டம் நடத்திய அழகிரி, எதிர் வரும் தேர்தலில் ஸ்டாலின் ஜெயிக்கவே முடியாது தன்னை கட்சியிலிருந்து ஓரம்கட்டியவர் ஸ்டாலின், தனக்கு துரோகம் இழைத்த அவரை நான் ஒரு போதும் வெற்றிபெற விடமாட்டேன் என்ற ரேஞ்சிக்கு சவால் விடுத்திருந்தார் அழகிரி. இது அப்போதே திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது. கட்சி தொடங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்பட்டும் என அன்றைய கூட்டத்தை அத்துடன் முடித்துக் கொண்ட அவர், அது குறித்து பிறகு வாய் திறக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். அழகிரி தன்னைக் குறித்து எத்தனை விமர்சனங்களை முன்வைத்தாலும் ஸ்டாலின் தன் அண்ணன் அழகிரிக்கு எதிராக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
மதுரை கூட்டத்திற்கு பிறகு அழகிரியை கருணாநிதி குடும்பத்தார் சந்தித்து சகோதரர்களுக்குள் மோதல் வேண்டாம், இதை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நேரிடும் என எடுத்துக்கூறி அழகிரியை சமாதானப் படுத்தியதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ஸ்டாலினுக்கு எதிராக திமுகவுக்கு எதிராக பேசுவதை நிறுத்திக் கொண்டார் அழகிரி. பின்னர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஸ்டாலின் முதல்வர் ஆனார். அப்போது ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக் கூறினர். ஆயிரம் பேர் வாழ்த்தினாலும் அண்ணன் அழகிரியின் வாழ்த்து போல வருமா என்று எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்த நிலையில் அண்ணன் என்ற முறையில் ஸ்டாலினுக்கு அழகிரி வாழ்த்து கூறினார். முதல்வராக என் தம்பியை எண்ணிப் பார்த்து பெருமைப்படுகிறேன். ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என்று அவர் உறுதி கூறினார். இது கருணாநிதி குடும்பத்தினர் மத்தியில் பெரும் நிம்மதி ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளாக இருந்து வந்த மோதலை மறந்து அழகரி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறிய நிலையில் பிரச்சனை முடிந்தது, அழகிரி திமுகவில் இணையப் போகிறார் என்று அன்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்து ஒராண்டு நெருங்கியுள்ள நிலையில், அழகிரி கட்சியில் இணைவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலை திமுக சந்திக்க உள்ள நிலையில் மீண்டும் தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்த அழகிரியை கட்சிக்குள் கொண்டு வரப் போகிறார் ஸ்டாலின் என்ற பேச்சுக்கள் உலா வருகின்றன. அதன் காரணமாகத்தான் முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி தன் அண்ணன் அழகிரியின் பெயரை உச்சரித்து வருகிறார் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- ஒரு காலத்தில் வைகோ ஸ்டாலினுக்கு போட்டியாளராக இருந்தார். ஆனால் இப்போது அந்த நிலை மாறிவிட்டது, ஆனாலும் அவருடைய அனுபவத்தை, வயதை மதித்து ஸ்டாலின் தன் அருகில் வைகோவை வைத்துக் கொண்டுள்ளார். அதேபோல்தான் அழகிரியும், மு.க ஸ்டாலினுக்கு போட்டியாளராக அப்போது இருந்தார். ஆனால் இப்போது இல்லை, அதே நேரத்தில் அழகிரி தென்மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்தவர், அதனால் அவரை அங்கீகரிப்பதில் ஸ்டாலினுக்கு எந்த இழப்பும் இல்லை, ஆனால் இதை வைத்துக் கொண்டு அழகிரியை ஸ்டாலின் கட்சிக்குள் சேர்த்துக் கொள்வார் என்று கூறமுடியாது என்னைப்பொறுத்தவரையில் மு.க அழகிரியை கட்சிக்குள் ஸ்டாலின் அனுமதிக்க மாட்டார். அதற்கான வாய்ப்பு குறைவு, அதேநேரத்தில் தனது அண்ணன் அழகிரியின் பெயரை ஸ்டாலின் அடிக்கடி உச்சரிப்பதற்கு காரணம், அழகிரி என் அண்ணன்தான், என் அண்ணனுக்கு மரியாதை கொடுங்கள் என்று கட்சிக்காரர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஸ்டாலின் கொடுக்கும் ஒரு மெசேஜ் ஆக கூட இருக்கலாம்.
இப்போது தான் வெற்றி பெற்று முதலமைச்சராக இருக்கும் நிலையில், தன் அண்ணனுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கருதுவதன் வெளிப்பாடுதான் அது. தென் மாவட்டங்களில் கட்சியை ஒருங்கிணைப்பது மற்றும் கட்டமைப்புகள் மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கு அழகிரியை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்வாரே தவிர, காட்சிக்குள் சேர்த்து கட்சிப் பணி செய்ய அனுமதிபார் என்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இப்போது அழகிரியின் தேவை ஸ்டாலினுக்கு இல்லை, அதேபோல இளைஞர் அணியில் துறை தயாநிதிக்கு வாய்ப்பு கொடுக்கப் போவதாக பரவலாக பேச்சுக்கள் அடிபடுகிறது, ஆனால் அதற்கும் வாய்ப்பு குறைவுதான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.