விரைவில் அதிமுக இல்லாமல் போய்விடும்... திமுகவில் இணைந்த அதிமுக மாஜி எம்.பி. சாபம்..!
அதிமுக முன்னாள் எம்.பி. பரசுராமன் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
அதிமுகவைச் சேர்ந்த தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்தார். அவர் முன்னிலையில் இன்று திமுகவில் பரசுராமன் இணைந்தார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் பரசுராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவினுடைய உண்மை தன்மையே குறைந்து போய்விட்டது. அதிமுக இன்று சிதறி போய், கிழிந்த சேலையாக ஆகிவிட்டது. விரைவில் அதிமுக இல்லாமல் போய்விடும் என்ற நிலை உண்டாகிவிட்டது. அதை எண்ணிதான் மக்கள் பணியாற்ற ஸ்டாலின் தலைமையில் செயல்பட முடிவெடுத்தேன். அதன்படி இன்று திமுகவில் இணைந்துள்ளேன். நான் அதிமுகவில் இருந்தவரை உண்மையாகவும் சிறப்பாகவும் பணியாற்றினேன். அதுபோல் திமுகவிலும் சிறப்பாக பணியாற்றுவேன்” என்று பரசுராமன் தெரிவித்தார்.