பிரதமர் மோடி, அமித்ஷா பெயரை கேட்டாலே அஞ்சி நடுங்கும் அதிமுக... எடப்பாடியை கடுமையாக விமர்சித்த ப.சிதம்பரம்..!
மாநில அரசுகள் மத்திய அரசை அனுசரித்து போகலாமே தவிர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போல் கும்பிட்டு குணிந்து செல்ல வேண்டியதில்லை என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
மாநில அரசுகள் மத்திய அரசை அனுசரித்து போகலாமே தவிர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போல் கும்பிட்டு குணிந்து செல்ல வேண்டியதில்லை என ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு பிரதமர் மோடியின் பெயரை கேட்டால் நடுக்கமடைந்து அமித்ஷாவின் பெயரை கேட்டால் மயக்கம் அடைந்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு மத்திய அரசுக்கு அஞ்சி நடுங்கி அடக்கம் ஒடுக்கமாக உள்ளார்கள். ஏனென்றால் மத்திய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட பல துறைகளை கைகளில் வைத்து கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டறியாமல் அரசியல் எதிரிகள், எதிர்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசை எதிர்ப்பது என்பது மாநில கட்சிகளுக்கு எளிதல்ல, மத்திய அரசை மாநிலத்தில் ஆட்சி செய்பவர்கள் அனுசரித்து போக வேண்டிய சூழ்நிலை தான் இருக்கும். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை போல் கும்பிட்டு குணிந்து செல்ல வேண்டியதில்லை. மத்திய பாஜக அரசை நேரடியாக எதிர்க்க கூடிய ஒரே கட்சி காங்கிரஸ் தான், அதனால் தான் பாஜக காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்குவோம் என்று கூறுகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் போட்டிப் போட்டுக் கொண்டு நாளிதழ்களில் விளம்பரம் கொடுக்கின்றனர். இவர்களை நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டு மாவட்ட வாரியாக இருவரின் இணையதளத்தில் வெளியிட தயாரா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சர் இடையே போட்டி உருவாகி உள்ளதாகவும் அந்த போட்டி 27ம் தேதி நடைபெற உள்ள ஒரு சம்பவத்தை அடுத்து மேலும் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ் மொழியை பின்னுக்கு தள்ளும் பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் அப்படி தோற்கடிக்கப்பட்டால் தான் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதாரம் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. சுமார் 13 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். இந்துத்துவா என்ற நச்சு இயக்கம் தென்னாட்டு மண்ணில் முளைக்கவிட ஒருபோதும் விடக்கூடாது என தெரிவித்துள்ளார்.