விரைவில் அதிமுக சிதறிவிடும் - தமிழிசை அதிரடி பேச்சு...
3 அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக விரைவில் முற்றிலும் சிதறிவிடும் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா பொதுச்செயலாளராகவும் ஓ.பி.எஸ் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
அப்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சசிகலா மீது பல குற்றசாட்டுகளை முன் வைத்தார். அதனால் ஜெயலலிதா மறைவு குறித்து சந்தேகத்தில் இருந்த பல அடிமட்ட தொண்டர்கள் தீபாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தனர்.
ஆனாலும் தீபா சசிகலாவை நேரடியாக எதிர்பதற்கு தயக்கம் காட்டி வந்தார்.
அந்த நேரத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்க சசிகலா பல முயற்சிகள் மேற்கொண்டதால் கொதித்தெழுந்த ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இதனால் தீபாவுக்காக காத்திருந்த பொதுமக்களும் தொண்டர்களும் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தீபாவும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார்.
தற்போது மூன்று தரப்பினரும் அதிமுகவிற்காகவும், இரட்டை இல்லை சின்னத்திற்காகவும் போட்டா போட்டி போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் பாரதிய ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
வாட் வரி உயர்த்தப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் தொடங்கியுள்ளது.
மறைமுகாமாக 20 முதல் 50% வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட எந்த பொருளும் கிடைப்பதில்லை.
தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் சட்டமன்ற தேர்தல் வரும்.
3 அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக விரைவில் முற்றிலும் சிதறி விடும்.
இவ்வாறு தமிழிசை பேசினார்.