மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும். அது உறுதி என்று தமிழக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகாசியில் நடைபெற்ற கண்டன் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்று பேசினார். “ சொத்து வரி உயர்வா இது? அல்லது சொத்து பறிப்பா? என்ற நிலையில் வாக்களித்த மக்கள் தவிக்கிறார்கள். ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி திமுக அரசு கோமாளியாக்கிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவே இல்லை. மக்கள் பழைய வரியைத்தான் செலுத்தி வந்தார்கள். சிவகாசி மாநகராட்சிக்கு 150 சதவீதம் வரி ஏற்றினால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

வீட்டு வாடகை உயரும்
வீட்டு வரியாக ஆயிரம் ரூபாய் கட்டுபவர்களை ஆண்டுக்கு 2500 ரூபாய் கட்டச் சொன்னால், வீட்டு வாடகையைத்தான் உயர்த்துவார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பைச் சந்திப்பார்கள். எனவே, சொத்து வரி உயர்வை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திமுக பாதகங்களை சந்திக்கும்
அப்படி இல்லை என்றால், அதன் சாதக, பாதகங்களை திமுக ஆட்சி சந்திக்க நேரிடும். உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். தேர்தலுக்கு ஓட்டு போட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் சொத்து வரியைக் கூட்டிவிட்டனர். அடுத்து பேருந்து கட்டணம், சினிமா டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்த இருக்கிறார்கள். ஏற்கனவே பால், தயிர், நெய் உட்பட எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர். இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக் கொண்டே போனால், இன்னும் 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். அவர்கள் வாழ்வதற்காக மக்களை பலிகடா ஆக்கிவிட்டனர்.

மீண்டும் அதிமுக ஆட்சி
மக்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியாக வாழ், அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கும். இந்தக் கட்சியை அழிக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. அதிமுகவில் இருப்பதே நமக்கெல்லேம் பெருமை. அதிமுகவை விட்டு வெளியேறிச் சென்றவர்களுக்கு சிறுமைதான் வந்து சேரும். எனவே, இயக்கத்தை விட்டுச் சென்றவர்களைப் பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும். அது உறுதி” என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
