அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை... ஹெச்.ராஜாவை பங்கம் செய்யும் அதிமுக..!
அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை என ஹெச்.ராஜாவுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ராஜ்சத்யன் பதிலடி கொடுத்துள்ளார்.
அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை என ஹெச்.ராஜாவுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி ராஜ்சத்யன் பதிலடி கொடுத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி விழா 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. வழக்கமாக இந்து அமைப்புகள் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தாக்கம் இருப்பதால் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனால், தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று இந்து அமைப்புகளும் பாஜகவும் பேசிவருகிறது. மேலும் அதிமுக அரசையும் பாஜகவினர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து ட்விட்டரில் தகவல்களைப் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்ட பதிவில், “சென்னையிலும் நேற்றிலிருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டு விட்டது. இதனால் கொரோனா வராதாம். ஆனால், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து 5-10 பேர் சமூக இடைவெளியோடு விசர்ஜனம் செய்தால் கொரோனா வந்துடுமாம். பகுத்தறிவு. கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று ஹெச்.ராஜா விமர்சனம் செய்திருந்தார்.
ஹெச்.ராஜாவின் இந்த ட்விட்டர் பதிவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகி கோவை சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஆண்மை என்பது யாதெனில் சாரணர் தேர்தலில் வெற்றி பெறுதல். நவீன திருவள்ளுவர்.” என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில், நீதிமன்றத்தை பழித்துப்பேசி பின் அட்மின் தவறென்று பதுங்கிய போதே உங்கள் ஆண்மை தெரியும் எங்களுக்கு, மக்கள் பணியை மகேசன் பணியாக ஆற்றும் அம்மா அரசுக்கு சர்மாக்களின் சான்று தேவையில்லை. சுயேச்சையாக 999 ஓட்டுக்கு மேல் வாங்கி மக்களிடத்தில், உங்கள் அரசியல் ஆண்மையே நிரூபியுங்களேன்’’ என பதிலடி கொடுத்துள்ளார்.