19 வயது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த அதிமுக எம்.எல்.ஏ., பிரபு..? மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற தந்தை.!
செளந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தனது மகளை எம்.எல்.ஏ., பிரபு ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தியாக துருகம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டவர் அ.தி.மு.க., எம்.எல்.ஏ கள்ளக்குறிச்சி அ.பிரபு. அடுத்து, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தான் அதிமுகவில் தான் இருக்கிறேன். வேறு எந்த கட்சிக்கும் போகமாட்டேன் என்று வாக்குறுதி அளித்து அதிமுக எம்.எல்.ஏ.,வாக இருந்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினரான பிரபு, 19 வயதான தனது காதலி சௌந்தர்யாவை கரம்பிடித்தார். 34 வயதான பிரபு, தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு-வுக்கும் காதலி சௌந்தர்யாவுக்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது. தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.,வின் பெற்றோர்கள் தலைமையில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வந்தனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக, செளந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன் தனது மகளை எம்.எல்.ஏ., பிரபு ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக தியாக துருகம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அப்போது போலீசார் புகார் மனுவை பெற மறுத்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினரை திருமணம் செய்து கொண்ட செளந்தர்யா இதுகுறித்து, ’’முழு சம்மதத்துடன் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் பிரபுவும் பெண்ணின் முழு சம்மதத்துடன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார். மணப்பெண்ணின் தந்தை புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.