அதிமுக ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸின் சொத்து.. சசிகலாவால் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்த முடியுமா.?
அதிமுக பொன்விழாவை வைத்து அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்த சசிகலா முயன்று வரும் நிலையில் அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி அரசியல் ஆய்வாளர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக தொடங்கப்பட்டதன் பொன் விழா அக்டோபர் 17 அன்று தொடங்குகிறது. இதைக் கொண்டாட அதிமுக சார்பில் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதிமுகவைப் போலவே சசிகலாவும் பொன் விழாவைக் கொண்டாட ஆயத்தமாகி வருகிறார். அக்டோபர் 16 அன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலரஞ்சலி செலுத்த உள்ள சசிகலா, அக்டோபர் 17 அன்று ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்துக்கும் செல்ல உள்ளார். இதேபோல தமிழக முழுவதும் தொண்டர்களைச் சந்திக்கவும் சசிகலா தரப்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதனால், அமமுகவினரும் சசிகலா ஆதரவாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே சசிகலா தனது முயற்சியில் வெல்லுவாரா அல்லது ஓபிஎஸ் - இபிஎஸ் அதிமுகவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வார்களா என்ற பட்டிமன்றமும் ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அரசியல் ஆய்வாளார் ரவீந்திரன் துரைசாமி இதுப்பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒருவேளை அதிமுக 20% 10 சீட்டு என படுதோல்வி அடைந்தாலும்.. நிச்சயம் இபிஎஸ் - ஒபிஎஸ் விட்டு கொடுக்க மாட்டார்கள். கட்சி சொத்து 20 % வாக்கு என்பது பெரிய விஷயம். இப்போது 33 % இருக்கு. இதை வைத்து கூட்டணி சேர்த்து 2001, 2011-இல் ஜெயலலிதா போல் எப்படி அடுத்து ஆட்சிக்கு வருவது என்பதைத்தான் பார்ப்பார்கள். கமலஹாசன் தயார் என்றால் 1998ல் பாமகவை சேர்ப்பது போல் சேர்ப்பார்கள். தினகரன் மேலும் பலவீனமடையட்டும், கடைசியில் ஏதோ கொடுத்து சட்டமன்றத்திற்கு வந்தால் சேர்ப்பார்கள்.
நாம் தமிழருக்கு திமுகழகம் 2016-ல் தேமுதிகவிற்கு கொடுத்த பெரிய ஆபரைவிட பெரிதாக கொடுப்பார்கள் (ஏற்பது தனித்தே போட்டியிடுவது சீமான் முடிவு) மொத்தத்தில் 1977 திமுக, 1996 அதிமுக போல் மாற்று சக்தி அதிமுகதான். இதன் தலைமை இபிஎஸ்-ஒபிஎஸ்தான். திமுகவின் ப்ளஸ் மற்றும் மைனஸ் அதிமுகவின் மைனஸ் மற்றும் ப்ளஸ், இதில் சசிகலாவுக்கு என்ன ரோல்? எதற்காக 0% சசிகலாவிடம் தங்கள் அதிகாரத்தை கொடுப்பார்கள்? என்ன இலாபம்? ஒருவேளை சசிகலா பலத்தை நிரூபித்தால் பலத்திற்கேற்ப கூட்டணியில் கடைசியாக சட்டமன்ற தேர்தலில் எப்படியும் ஆட்சிக்கு வர வேண்டும் என மதிமுக மாதிரி என்சிபி மாதிரி 1%க்கு 4 சீட்டு, 2%க்கு 8சீட்டு, 3%க்கு 12 சீட்டு, 4% க்கு 16 ..என இந்த ரேஞ்சில் சீட்டு வழங்குவார்கள்.
அதற்கு சசிகலா பலத்தை நிரூபிக்க வேண்டும். மற்றபடி அதிமுக இபிஎஸ்- ஒபிஎஸ் சொத்து. கட்சி எல்லாம் சொத்தாக மாறி எவ்வளவோ காலமாகி விட்டது. சசிகலாவுக்கு statutre இருக்கு superior ஆக இருந்தவர். அதுதான் சேர்க்க மாட்டார்கள் என்பதற்கு 100% காரணம்.” என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.