இதுல விட்டா கதை கந்தல்..? உள்ளாட்சி தேர்தலில் தட்டிதூக்க அதிமுக தீவிரம்.. நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசணை.
அதற்காக இன்று முதல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது
தமிழகத்தில் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதிமுக ஆட்சியின்போது கடந்த 2018 ஆம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. நிர்வாகிகள் பதிவியேற்றுக்கொண்டனர்.
ஆனால் தமிழக அரசால் புதிதாக மாவட்டங்களில் பிரிக்கப்பட்டதால், அதாவது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை செய்யப்படாத காரணத்தினால், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆனால் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மீதமுள்ள புகுதிகளுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. குறிப்பாக அதிமுக-திமுக ஆகிய இரு கட்சிகளும் இதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. சட்டமன்றத்தில் தோல்வியடைந்து எதிர்க்கட்சியாகியுள்ள அதிமுக உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை கைப்பற்றினால் மட்டுமே அடிமட்டத்தில் கட்சியை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதில் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறது.
அதற்காக இன்று முதல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகியோர் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஒன்பது மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பு அடுத்த நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்க உள்ளது. அதில் உள்ளாட்சித் தேர்தலில் முன்னெடுக்க வேண்டிய வியூகம், மக்கள் செல்வாக்கு உள்ள வேட்பாளர்களை நிறுத்துவது, கணிசமான இடங்களை கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன என்பன உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.