ஒரே கேள்வி..! ஆடிப்போன திமுக, காங்கிரஸ்.. அலரவிட்ட விஜயபாஸ்கர்..
‘ நீட் என்ற வார்த்தையை கொண்டு வந்தது காங்கிரஸ் தான்’ என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச, சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் விலக்கு மசோதா கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சட்ட மசோதா தயாரிக்கப்பட்டு, அது குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறுவதற்காக ,தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 142 நாட்கள் கழித்து தமிழக சட்டமன்றம் நீட் விலக்கு மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து நீட் விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட தமிழக முதல்வர் மீண்டும் சட்டப்பேரவையை கூட்டி, மசோதாவை தாக்கல் செய்து, அதை ஆளுநருக்கு அனுப்ப முடிவு எடுத்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழக சிறப்பு சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று கூடியுள்ளது.
இதில் ஆளுநரின் கடிதத்தில் உயர்மட்ட குழுவின் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை. யூகங்களின் படி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டி சபாநாயகர் அப்பாவு முழுமையாக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த விளக்கத்தை வாசித்தார். இந்நிலையில் சட்டப்பேரவையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவை நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் தாக்கல் செய்தார்.
இந்த மசோதா குறித்து பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.அப்போது பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘நீட் என்ற சிஸ்டத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். நீட் என்ற வார்த்தையை கொண்டு வந்தது காங்கிரஸ் தான். 27.12.2010 இல் இதனை கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சிதானே’ என்று கூற அவையில் திமுக,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கூச்சலிட, அதிமுகவினரும் கூச்சலிட்டனர். இதனால் அவையில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ‘1984ஆம் ஆண்டு நுழைவுதேர்வை கொண்டு வந்தது யாருடைய ஆட்சி என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் மருத்துவ படிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசுதான் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். மேலும் 2005ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் என்று கூறினார். அப்போது அப்போது விஜயபாஸ்கர் கருத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்து காரசாரமாக பேசினார்
இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை ஒரு வருடம் அதிமுக அரசு மறைத்து வைத்திருந்தது என்றும், ஆனால், திமுக அரசு உடனடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் முதல்வர் ஸ்டால்லின் கூறினார். இதனையடுத்து நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும், ஆனால் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில் அமல்படுத்தியது போல் பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இவ்வாறு நீட் தேர்வு குறித்து உறுப்பினர்கள் காரசாரமாக விவாதம் செய்தனர்.