அண்ணா மன்றத்தையே விற்ற ரத்தத்தின் ரத்தங்கள்... அதிமுக நிர்வாகிகள் அட்ராசிட்டி..!
அந்த இடத்தின் முன்பகுதியை இரவோடு இரவாக இடித்து விட்டு பின் பகுதியில் அரிசி வியாபாரியின் இடத்தில் மன்றத்தை மாற்றியுள்ளனர்.
சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் அப்பகுதி அதிமுகவினர் கடந்த 50 வருடங்களாக அண்ணா மறுமலர்ச்சி மன்றம் என்ற பெயரில் மன்றத்தை நடத்தி வருகின்றனர். அந்த இடத்தில் கட்சிப் பணிகள், உறுப்பினர்கள் சேர்க்கை என பல பணிகளை செய்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்திற்கு பின் பகுதியில் உள்ள அரிசி வியாபாரி அதிமுக மன்றம் உள்ள முன்பகுதி இடத்தை தனக்கு தந்துவிட்டு நீங்கள் பின் பகுதியில் உள்ள இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு அதிமுகவை சேர்ந்த 4 பேர் யாருக்கும் தெரியாமல் சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து சில லட்சங்களை பெற்றுக் கொண்டு அந்த இடத்தின் முன்பகுதியை இரவோடு இரவாக இடித்து விட்டு பின் பகுதியில் அரிசி வியாபாரியின் இடத்தில் மன்றத்தை மாற்றியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் சம்பந்தமாக வெளியூர் சென்று இருந்த அந்த பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் வந்து பார்த்தபோது மன்றம் இடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்பு விசாரித்துப் பார்த்ததில் அதே பகுதியில் மாவட்ட செயலாளருக்கு எதிராக செயல்படும் ஒரு கோஷ்டியினர் மன்றத்தை 10 லட்ச ரூபாய்க்கு விலை பேசி முன்பணமாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாங்கியது தெரிந்தது.
அந்த ஏரியாவின் பகுதி செயலாளர் இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளாராம். மன்றத்தை இரவோடு இரவாக இடித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி செயலாளர் புகார் மனு அளித்துள்ளாராம். எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கட்சித் தலைமைக்கும் புகார் அனுப்பியுள்ளனர். வழக்கம்போல அதிமுக தலைமை இந்த விஷயத்திலும் மவுனம் காத்து வருவதாக அப்பகுதி அதிமுகவினர் முணுமுணுத்து வருகின்றனர்.