திமுகவுக்கு தாவ காத்திருக்கும் தஞ்சாவூர் முன்னாள் எம்.பி. பரசுராமனை அதிமுகவிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் தஞ்சாவூர் அதிமுக எம்.பி.யுமான பரசுராமன் அதிமுகவில் அதிருப்தியில் இருந்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கத்தின் தீவிர ஆதரவாளரான இவர், அண்மையில் மு.க.ஸ்டாலின் அரசைப் பாராட்டி பேசினார். “தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது. தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தந்திக்கொண்டிருக்கிறார். தளபதி ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். 
நானும் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன். எப்போதும் இந்த ஆட்சியே தொடர வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை.” என்றெல்லாம் பேசியிருந்தார். இதனால், பரசுராமன் திமுகவுக்கு தாவுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பரசுராமன் தனது ஆதரவாளர்களோடு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து பேசினார். பரசுராமன் திமுகவில் இணைய உள்ளதாக தஞ்சை திமுகவினரும் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைய பரசுராமன் நேரம் கேட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இந்நிலையில் பரசுராமனையும் அவருடைய ஆதரவாளர்களையும் அதிமுகவின் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.