அதிமுகவில் அதிரடி மாற்றம்; ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு!
அதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் 2-ஆக பிரிக்கப்பட்டதுடன் திருநெல்வேலி மாநகர மாவட்டத்திற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் விடுக்கப்பட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்சியின் நிர்வாக வசதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு, மேற்கு 2-ஆக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளும், மேற்கு மாவட்டத்தில் பத்மநாபபுரம், விளவன் கோடு, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கி செயல்படும்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக அசோகனும், மேற்கு மாவட்டச் செயலாளராக ஜான் தங்கமும் நியமிக்கப்படுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதேபோல் திருநெல்வேலி மாநகர மாவட்டச் செயலாளராக தச்சையன் கணேசராஜாவை நியமித்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அறிவித்துள்ளனர். கழக உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்த பாப்புலர் முத்தையா, டி.டி.வி. தினகரன் கட்சியில் சேர்ந்து விட்டதால் அவருக்கு பதில் தற்போது கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.