அதிமுக இதற்கெல்லாம் அசராது.. ஜெயக்குமாரை உடனே விடுதலை பண்ணுங்க.. திமுகவை எச்சரித்த ஜி.கே வாசன்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. திமுக வெற்றிக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இட பங்கீடு ஒருபுறம் இருந்தாலும் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் தான் வெற்றி பெற முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளை மீறிய கட்சியாகவே ஆளும் கட்சி கூட்டணிகள் செயல்பட்டன.
அதிகார, பண பலத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது என்றும் அதிமுக கூட்டணி தோல்வி தற்காலிமானது என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 60 வது வார்டில் கீதா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து இன்று சென்னை விமான நிலையம் வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனை நேரில் சந்தித்து சான்றிதழ் கொடுத்து வாழ்த்துக்களை பெற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் கூறுகையில்:-
நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. திமுக வெற்றிக்கு கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இட பங்கீடு ஒருபுறம் இருந்தாலும் ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் ஆகியவற்றால் தான் வெற்றி பெற முடிந்தது. தேர்தல் ஆணையத்தின் கோட்பாடுகளை மீறிய கட்சியாகவே ஆளும் கட்சி கூட்டணிகள் செயல்பட்டன. கூட்டணியில் த.மா.கா.விற்கு குறைவான இடங்களில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் கூட கணிசமான இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். கூட்டணி கட்சிக்குள் கூட்டணி தர்மத்தை கைப்பிடிக்கும் கட்சியாகவே த.மா.கா. செயல்பட்டு உள்ளது. அதிமுக, த.மா.கா. கூட்டணி தோல்வி தற்காலிமானதே. நகர்புற உள்ளாட்சி அதிமுக, த.மா.கா. கூட்டணியில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
அதிமுக, த.மா.கா. கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்த கூடிய நிலையில் பணியாற்றுவார்கள். மக்கள் பணியில் சிறப்பாக செயல்படுவார்கள். பகுதி பிரச்சனைகளை வாதாடி,போராடி ஆட்சியாளர்களிடம் இருந்து பெற்று தரக்கூடிய வல்லமை பெற்றவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டிக்கத்தக்கது. திமுக கூட்டணி கட்சிகளில் தேர்தல் பல அத்துமீறல்களில் ஈடுப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் முறையாக எடுக்காமல் முன்னாள் அமைச்சர் மீது குறி வைத்து கைது செய்தது மக்கள் விரும்பவில்லை. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.