அம்மா பெயர் வைத்தது தான் குற்றமா.. விடியல் அரசுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா ? எடப்பாடி ஆவேசம்
தமிழகத்தில் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படும் என்ற அறிவிப்புக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஈ.பி.எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘அம்மா மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே ஏற்படுத்தப்பட்டது. இதனால் எந்த பயனும் இல்லை. அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரிந்த மருத்துவ பணியாளர்களுக்கு மார்ச் வரை பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுகின்றன. 2000 மினி கிளினிக்குகளை மூட சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மினி கிளினிக்குகள் தற்காலிகமாகவே தொடங்கப்பட்ட நிலையில் அதில் பணியாற்றும் பணியாளர்கள் தடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’ என்றார்.
இந்நிலையில் அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.