AIADMK-BJP coalition in parliamentary elections? Chief Advisory at Head Office

நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் அதிமுக முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. சென்னையில் 16-ம் தேதி திங்களன்று நடைபெற இருக்கும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியுடனான உறவு, நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக தலைமை வகிக்க உள்ளனர்.

அதிமுகவிற்கு உறுப்பினர்கள் சேர்த்தல், புதுப்பித்தல் விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மாவட்ட செயலாளர்கள் பலர் மீது கட்சியினர் புகார் தெரிவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது. மேலும் பாரதிய ஜனதா கட்சி உடனான உறவு குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது பற்றியும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 பாஜக தனது தேர்தல் பணிகளை திட்டமிட்டு தொடங்கியுள்ள நிலையில், அதிமுகவும் அதனை பின்தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்றத் கூட்டத்தொடர் 18-ம் தேதி தொடங்க உள்ளதால் அதிமுக எம்.பி.க்கள் கூட்டமும் திங்களன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.