மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் அமமுக இணைகிறது..?
அதிமுகவில் டிடிவி.தினகரன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருகிறது என மதுரை ஆதினம் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறி வந்த நிலையில் மதுரை ஆதினம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் டிடிவி.தினகரன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடைபெற்று வருகிறது மதுரை ஆதினம் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று கூறி வந்த நிலையில் மதுரை ஆதினம் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என அதிமுக இரண்டாகப் பிரிந்தது. மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாக ஓபிஎஸ் வைத்த நிபந்தனைகளுள் ஒன்று டிடிவி தினகரனை ஓரங்கட்டுவது. அந்த கோரிக்கை ஏற்று செயல்படுத்திய பின்னர் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. தனித்துவிடப்பட்ட டிடிவி தினகரன் இணைப்பு வியூகத்தை எல்லாம் முறியடித்து ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மக்களவை தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமமுக தனித்து போட்டியிடுகிறது. அதிமுக பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மதுரை ஆதீனம் அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைவது உறுதி என்றார். தினகரன் பண்பாளர் என்றும், மிகவும் பொறுமைசாலி என்று கூறினார். இதனை சுட்டிக்காட்டிய டிடிவி, ஆதீனம் சொல்லியிருப்பது ஆதாரமற்றது என்றார். அது உண்மையும் அல்ல; இணைப்பதற்கு அவசியமும் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது. மக்களவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் டிடிவி.தினகரன் இணையும் காலம் வரும். பொறுத்திருந்து பாருங்கள் என்றார். யார், யார் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள் என்பதை வெளிப்படையாக கூற இயலாது என்றும் தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் கூறிய நிலையில் மதுரை ஆதீனம் மீண்டும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது தொண்டர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.