தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டநிலையில், நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழக நிதி நிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்டபேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்ய சபாநாகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஏ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சி சார்பாக செல்வபெருந்தகை, பாமக சார்பாக ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்தார். அதில் நாளை தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறினார். இந்த பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து திங்கட் கிழமை முதல் வியாழக்கிழமை வரை பட்ஜெட் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் கூறினார். வருகிற 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பாக விவாதம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வருகிற 24 ஆம் தேதி நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பதிலுரை வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நாட்களிலும் கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் அப்பாவு, இறுதி நாளன்று அமைச்சர்களின் பதிலுரையும் நேரடி ஒளிபரப்பு செய்ய இருப்பதாக கூறினார்.
