தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் – சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி…
ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து நடக்கவிருக்கும் பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு முழு ஆதரவு வழங்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அடிக்கடி ஏதாவது ஒரு கூற்றை அவசரமாக வெளியிட்டு பல பிரச்சனைகளை விலைக்கு வாங்கி கொள்வதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேர் போனவர்.
சில நாட்களுக்கு முன்பு தனியார் பாலில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ரசாயனம் கலப்படம் செய்யப்படுவதாக ஒரு புரளியை கிளப்பி விட்டார். தமிழகத்தில் இருந்து பால் மாதிரியை புனேவிற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் புனேவிற்கு பால் மாதிரியே வரவில்லை என அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால் அப்படியே பின் வாங்கினார்.
இன்னிலையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக எந்த பொருளும் விலை உயராது என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து ஜி.எஸ்.டி வரி விதிப்பை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் ஜூலை 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு முழு ஆதரவு அளிக்கும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் இடையே ஜி.எஸ்.டி மசோதாவை நிறைவேற்றியதே எடப்பாடி தலைமையிலான அரசு தான் என்பது குறிப்பிடத்தக்கது.