admk vote bank is enough to contest in rk nagar by election says maithreyan mp

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு, பாஜகவின் உதவி தேவையில்லை என்று கூறியுள்ள அதிமுக., நாடாளுமன்ற உறுப்பினர் வா.மைத்ரேயன், ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையில் மதுசூதனனைச் சந்தித்த பின் அதிமுக., எம்.பி. மைத்ரேயன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துவது தேர்தல் ஆணையத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். தமிழகத்தில் பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆர்.கே.நகரில் பாஜக.,வுக்கு வாக்கு வங்கி இல்லை. எனவே, பாஜக.,வின் உதவி எல்லாம் அதிமுக.,வுக்கு தேவையில்லை என்று கூறினார். 

ஜெயலலிதா காலமானதை அடுத்து காலியானது, ஆர்.கே. நகர் தொகுதி. இந்தத் தொகுதிக்கு வரும் டிச.21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் மதுசூதனன், எதிர்க்கட்சியான திமுக சார்பில் மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

இவர்கள் தவிர டிடிவி தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஜெ.தீபா, கலைக்கோட்டுதயம் என வேட்பாளர்கள் பலர் களத்தில் உள்ளனர். இதனால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தினகரன் என்னவோ, தனக்கும் திமுக.,வுக்கும் தான் போட்டி என்றுகூறியுள்ளார். திமுக.,வோ இரட்டை இலைச் சின்னம் கிடைத்தபின்னர் நடக்கும் தேர்தல் என்பதால், வழக்கம்போல், எதிர்க்கட்சிக்களின் ஆதாவைக் கோரிப் பெற்றது. மதிமுக., இன்னும் முடிவு செய்யவில்லை. இந்நிலையில், பாஜக.,வின் சார்பில் அதன் மாநிலத் தலைவரே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.