இரட்டை இலை விவகாரத்தில் சுகாஷுக்கு காவல் நீடிப்பு – நீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், கைது செய்யப்பட்ட சுகாஷ் சந்திராவுக்கு ஜூலை 11ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதிமுகவில் இரு அணிகள் செயல்படுகின்றன. இதனால், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை, தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையொட்டி, இரு அணிகளும், சின்னத்தை பெறுவதற்காக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து கொண்டு இருக்கின்றன.
இதையொட்டி கடந்த மார்ச் மாதத்தில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக, டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் டிடிவி.தினரகன் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு இடை தரகராக செயல்பட்டதாக சுகாஷ் சந்திரா உள்பட சிலரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், டிடிவி.தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது, கட்சி பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையில், சுகாஷ் மீது பல்வேறு மோசடி புகார்கள் சென்றன. இதையடுத்து, அந்த புகார்களின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், அவர் பலமுறை ஜாமீன் கேட்டும், நீதிமன்றம் வழங்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கின் விசாரணை இன்று டெல்லி நீதிமன்றத்துக்கு இன்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூலை 11ம் தேதி வரை, சுகாஷுக்கு காவலை நீடித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.