அந்த பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பாஜக போட்டியிட உள்ள 20 தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு 23 தொகுதிகளும், பாஜகவிற்கு 20 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள 6 முதற்கட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் தொகுதிகளையும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர். இந்நிலையில் நேற்றிரவு கூட்டணிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


முதலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அதிமுக வேட்பாளர்களுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் நேற்றிரவு 9.15 மணி அளவில் பாஜக தலைவர் எல்.முருகன், கிஷன் ரெட்டி, பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். சுமார் 2.30 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்ய உள்ள தொகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அந்த பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பாஜக போட்டியிட உள்ள 20 தொகுதிகள் எவை என்பது குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, ஊட்டி, நெல்லை, தளி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.