இதென்ன கலாட்டா அதிமுகவுக்கு எத்தனை பேர்தான் வாரிசு
எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜானகி ராமச்சந்திரனை ஒரு பிரிவும் , ஜெயலலிதாவை ஒரு பிரிவும் தூக்கி பிடித்தது. ஆனால் ஜெயலலிதா தரப்பினரை மக்கள் அங்கீகரித்ததால் ரெட்டை இலை சின்னத்தை காப்பாற்ற , அதிமுக ஜெயலலிதா தலைமையின் கீழ் ஒரே குடையின் கீழ் வந்தது.
அதன் பின்னர் அதிமுகவை எம்ஜிஆரைவிட சிறப்பாக நடத்தி சென்றார் ஜெயலலிதா , அதிமுக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 37 பாராளுமன்ற எம்பிக்கள் என மொத்தம் 50 எம்பிக்களை கொண்ட மூன்றாவது பெரிய கட்சியாக பாராளுமன்றத்திலும் , சட்டமன்றத்தில் 84 க்கு பிறகு தொடர்ந்து இருமுறை கட்சியையும் ஆட்சியில் அமர்த்தி காட்டினார்.
எம்ஜிஆரின் சொந்தங்கள் அதன் பிறகு அரசியலில் ஈடுபடவில்லை. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபா தான் வாரிசு எனபதை கூறி வருகிறார். ஆனால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் சசிகலாவை வாரிசாக அடுத்த தலைமையாக ஏற்க முன் வந்துவிட்டனர்.
இந்நிலையில் தமிழகம் முழுதும் தீபாவை ஆதரித்தும், சசிகலாவை எதிர்த்தும் போஸ்டர் யுத்தம் தொடங்கி விட்டது. சசிகலாபுஷ்பாவும் இன்று வேட்பு மனுதாக்கல் செய்வதாக அறிவித்து பிரச்சனை ஆனது.
நேற்றிரவு சென்னை முழுதும் எம்ஜிஆர் , ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுக கட்சிக்கு எம்ஜிஆர் அண்ணன் சக்ரபாணியின் வாரிசுகள் தலைமை தாங்க வேண்டும் என கோரிக்கையை வைத்து தென்னக விவசாயிகள் சங்கம் அமைப்பின் சார்பில் போஸ்டர் ஒட்ட சிலர் முயன்றனர் அந்த போஸ்டர்களை போலீசார் ஒட்ட விடாமல் தடுத்து கைப்பற்றினர்.
எத்தனை வாரிசுகள் தான் கிளம்பி வருவார்கள் , இத்தனை நாள் இவர்கள் எங்கே இருந்தார்கள் என போலீசார் தலையிலடித்து கொண்டனர்.