போகாத ஊருக்கு வழி சொல்கிறார் அமைச்சர்.. செந்தில்பாலாஜியை தாக்கிய ஓபிஎஸ் - அறிக்கை விட்டு அதிரடி
நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் மாதாந்திர மின் கணக்கீடு திட்டமும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதை தான் சூசமாக மின்சாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.
இதுக்குறித்து அவரது அறிக்கையில், "இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதைத் தவிர்க்கும் வகையில் மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வரையில் பயன் பெறுவர் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தரப்பட்டது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களை வஞ்சிப்பது போல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அவர்களின் பேச்சு அமைந்துள்ளது.
அண்மையில், புதுடெல்லியில் மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் அவர்களை சந்தித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி , உள்கட்டமைப்புகளை பலப்படுத்திய பின் தமிழகத்தில் மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இதனுடைய உள்ளார்ந்த பொருள், நீட் தேர்வு ரத்து, ஏழு பேர் விடுதலை, கல்விக் கடன் ரத்து போன்ற அறிவிப்புகள் போல் இதுவும் குழிதோண்டி புதைக்கப்படும் என்பதுதான் என்று விமர்த்துள்ளார்.
ஒரு மாநிலத்தினுடைய மின் துறையின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது என்பது அந்த மாநிலத்தில் பெருகிவரும் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல காரணிகளை உள்ளடக்கிய தொடர் பணிகளாகும். அவை காலத்திற்கேற்ப, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, தேவைக்கேற்ப தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். உட்கட்டமைப்பு பணிகள் எப்போது முடிந்து இந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு ஏதாவது கால அளவு இருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்ற அவர் அமைச்சர் ஏதாவது கால அளவை குறிப்பிட்டு இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை என்று சாடியுள்ளார்.
அமைச்சர் பேச்சு போகாத ஊருக்கு வழி சொல்வது போல அமைந்திருக்கிறது. எனவே உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்பட்ட பின் மாதாந்திர பின் கணக்கீடு நடைமுறை அமல்படுத்தப்படும் என்பது இந்த வாக்குறுதி 'அதோகதி' என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாக்குறுதியையும் நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையைத்தான் தி.மு.க. அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். இந்த மக்கள் விரோதச் செயலுக்கு ,அனைத்திந்திய அண்ணர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில், மாதாந்திர மின் கணக்க்டு நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரை கேட்டுக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.