'அவங்க வலையில் விழுந்துராதீங்க'..! கார் தாக்கப்பட்டதால் கொந்தளித்த ஓ.பி.ஆர்..!
அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி வன்முறையை தூண்டுவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடந்த எதிர்மறையான பிரச்சாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக ரவீந்திரநாத் குமார் கூறியிருக்கிறார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் கம்பத்தில் அதிமுக சார்பாக நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேற்று இரவு வந்திருந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லீம் அமைப்புகளை சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
இரவு 9 மணியளவில் ரவீந்திரநாத் குமார் காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருடன் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளும் உடன் வந்தனர். அப்போது முஸ்லீம் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைகளில் கருப்பு கொடியுடன் ரவீந்திரநாத் குமாரின் காரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக எம்.பி வாக்களித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷமிட்டனர். இதனால் காரில் இருந்து இறங்காமல் ரவீந்திரநாத் குமார் உள்ளேயே அமர்ந்திருந்தார்.
அப்போது சிலர் அவரது காரை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. பாஜக நிர்வாகியின் காரும் தாக்கப்பட்டது. இதன்காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து 43 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகே ரவீந்திரநாத் குமார் விழாவில் பங்கேற்றார். கார் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் தனது கார் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ரவீந்திரநாத் குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அமைதியான தேனி மாவட்டத்தில் அமைதியின்மையை உருவாக்கி வன்முறையை தூண்டுவதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடந்த எதிர்மறையான பிரச்சாரத்திற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாக ரவீந்திரநாத் குமார் கூறியிருக்கிறார். மேலும் இவ்வாறு தவறான பிரச்சாரங்களில் ஈடுபவர்களின் வலையில் மக்கள் விழுந்துவிட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read: அசுர போதையில் 5 பேருடன் பைக்கில் பறந்த வாலிபர்..! நீதிபதி கொடுத்த விநோத தண்டனை..!