ADMK MLA Are Planing like Koovathur formula
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கூவத்தூரில் சிறை வைக்கப்பட்ட எம்.எல்.ஏ க்களிடம், தற்போதுள்ள நிலையில், இன்னொரு தேர்தல் வந்தால் உங்களால் ஜெயிக்க முடியமா? என்பதே முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்வி.
மீண்டும் தேர்தலை சந்திக்க முடியாது என்று உணர்ந்த எம்.எல்.ஏ க்கள், எஞ்சிய நான்கு ஆண்டுகளை எந்த சிக்கலும் இல்லாமல் தொடரவேண்டும் என்ற நோக்கில், கிடைத்ததை பெற்று கொண்டு, எடப்பாடி முதல்வராக ஆதரவு அளித்தனர்.
அதை தொடர்ந்தது, கடந்த மூன்று மாதமாக சிக்கல் இல்லாமல் போய் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, சிறையில் இருந்து தினகரன் ஜாமினில் வந்ததும் மீண்டும் நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்துள்ளது.

இதனால், அச்சமடைந்த எம்.எல்.ஏ க்களில் சிலர், தங்களது ஆஸ்தான ஜோதிடர்களை சந்தித்து, என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டுள்ளனர்.
அதற்கு, தற்போதுள்ள நிலையில், ஆட்சி நிலைப்பது கேள்விக்குறியே, அதனால், முடிந்த வரை, செலவு செய்த பணத்தை எப்படி வசூலிக்க முடியுமோ, வசூலித்து கொள்ளுங்கள் என்று ஜோதிடர்கள் சிலர் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள்.
இந்த தகவல் மற்ற எம்.எல்.ஏ க்களுக்கும் பரவ, விசுவாசமாவது ஒண்ணாவது, இப்போதுள்ள நிலையில் மீண்டும் தேர்தல் வந்தால், போட்டியிட்டு வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை.
அதனால், எரியும் வீட்டில் எழுத்த வரை ஆதாயம் என்று, யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவோம். அதையும் மீறி ஆட்சி நிலைத்தால் லாபம். இல்லை என்றாலும் நமக்கு நஷ்டம் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் பல எம்.எல்.ஏ க்கள்.

இதுவே, தினகரன் தரப்புக்கு மிகவும் சாதகமாகி உள்ளது. அதனால், தினகரன் வலையில், தங்கள் மாவட்ட எம்.எல்.ஏ க்கள் சிக்கிவிட கூடாது என்று அமைச்சர்கள் பலர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை.
எம்.எல்.ஏ க்கள் பலரது செபோன்களில் இருந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவே, அமைச்சர்களுக்கு தகவல் வந்துள்ளது. அவர்களின் உதவியாளர்களுக்கு கூட லைன் கிடைக்காமல் போனதால், அமைச்சர்கள் பலர் விரக்தி அடைந்துள்ளனர்.
அதனால், என்ன நடந்தாலும் நடக்கட்டும், ஆட்சி கவிழ்ந்தால் நமக்கு மட்டுமா நஷ்டம், தினகரனுக்கும்தானே நஷ்டம்.. விடு பார்த்து கொள்ளலாம் என்று அமைதியாகி விட்டார்களாம் அமைச்சர்கள்.
ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, அணிகள் மூன்று பட்டால் தங்களுக்கு கொண்டாட்டம் என்ற அடிப்படையில், முடிந்த வரை அறுவடை செய்ய தயாராகி விட்டார்கள் எம்.எல்.ஏ க்கள் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.
