ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மாலை நிலவரப்படி 40,698 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 22,047 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில், 367 பேர் உயிரிழந்துள்ளனர். 18,281 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா வைரஸ் தொற்றிவருகிறது. கொரோனா ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான சூழலில் களத்தில் இறங்கி களப்பணியாற்றும் மக்கள் பிரதிநிதிகள், மருத்துவர்கள், காவல்துறையினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகிவருகிறது. 

தமிழ்நாட்டில் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாவது எம்.எல்.ஏ பழனி ஆவார். 

மகாராஷ்டிராவில் 3 அமைச்சர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.