அதிமுக இரண்டாக பிளவு பட்டு அதிமுக பொது செயலாளர் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் என இரு அணிகளாக செயல்படுகிறது. இதனால், யார் முதலமைச்சர் பதவியில் உட்காருவது என கடும் போட்டி நிலவியது. இதனால், இரு தரப்பினரும் கவர்னரிடம், தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.

இதையடுத்து, கவர்னர் வித்யாசாகர் ராவ், எம்எல்ஏக்களின் பட்டியலை ஆய்வு செய்தார். அதில், சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவர் உள்பட 11 பேர் மட்டுமே இருந்தனர்.

இதனால், அதிமுக பொது செயலாளர் சசிகலா தரப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், 15 நாட்களுக்குள் தனி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து, கடந்த 16ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில், எடப்பாடி பழனிச்சாமியின் தனிப் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் மீது, அந்தந்த தொகுதி மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இதனால், எம்எல்ஏக்களுக்கு அஞ்சலி போஸ்டர், காணவில்லை போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

மேலும், எம்எல்ஏக்களின் செல்போன் எண்களில் ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தொடர்பு கொண்டு, சரமாரியமாக வசை பாடினர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஆறுமுகம். நேற்று முன்தினம் இரவு எம்எல்ஏ ஆறுமுகம், புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள தனது வீட்டில் சாப்பிட்டு, குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் அவரது வீட்டின் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது. இதனால், அலறியடித்து கொண்டு எழுந்த எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர், வெளியே வந்து பார்த்தனர். அதற்குள், கற்களை வீசிய மர்மநபர்கள், அங்கிருந்து தப்பிவிட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.