Thangamani : இன்று தங்கமணி.. அடுத்து எடப்பாடி.. முதல்வரின் பழைய கணக்கு இதுவா ?
முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது நாமக்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011 முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக தங்கமணி குடும்பம் ரூ.4.75 கோடி சொத்து சேர்த்துள்ளதாகவும், சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட கோடிக்கணக்கான சொத்துக்களை தங்கமணி கிரிப்டோகரன்சி முதலீடு செய்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எம் ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ,சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனையில் சிக்கும் ஐந்தாவது முன்னாள் அமைச்சர் தங்கமணி என்பது கவனிக்கத்தக்கது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுகவின் ஊழல்களை பட்டியலிட்டதோடு, தான் முதல்வராக வந்ததும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளித்தார்.
அவர் சொன்னது போலவே, தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து முன்னாள் அதிமுக அமைச்சர்களின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகள் நடத்தி வருகிறது. அமைச்சர்களோடு நிற்காமல் முந்தைய ஆட்சியில் முறைகேடு செய்த அதிகாரிகளும் ரெய்டுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் என அனைவரது இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரில் தொடங்கி, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி உள்ளிட்டோர் வீடுகளிலும் ரெய்டு நடந்தது. கடைசியாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் ரெய்டு நடந்தது. ரெய்டுகளை தொடர்ந்து வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது ஐந்தாவது ஆளாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் இணைந்துள்ளார். அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. முதலில் சிக்கியவர் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் வருமானத்துக்கு 55 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாக இருந்த சொத்து, 2021ல் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு, அலுவலகம் என கோவையிலும், சென்னையிலும் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவை சேர்ந்த வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது.
ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர் அமைச்சராக இருந்த போது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தது.
இதனையடுத்து இவர் மீதும் இவர் மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாகவும் விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து வருகிறது.
ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து மாதம் ஒருவர் என முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடந்து வந்தது. நவம்பர் மாதத்தில் ரெஸ்டு விட்டு, தற்போது டிசம்பர் மாதத்தில் தங்கமணி வீட்டில் ரெய்டை தொடங்கியுள்ளனர். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை தொடர்ந்து வருகிறது.இது அரசின் பழிவாங்கும் செயல் என்று விமர்சித்து வருகின்றனர் அதிமுகவினர்.