இனிமேலும் அடிமையா இருக்கணுமா? தினகரனை அனுமதிக்காதிங்க: எடப்பாடியாரை எச்சரிக்கும் அமைச்சர்கள்!
திகார் சிறையில் இருந்து தினகரன் வெளிவந்ததை அடுத்து, கட்சியையும், ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர அவர் கடுமையாக போராடி வருகிறார்.
குறைந்த பட்சம் கட்சி அலுவலகத்தில் நுழைவதற்காவது, தினகரனுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று, அவரது ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே, கட்சி தொண்டர்கள் மத்தியில் தினகரனுக்கு எதிர்ப்பு அலை வீசுவதன் காரணமாகவே, பன்னீருக்கு போகும் இடமெல்லாம் கூட்டம் கூடுகிறது என்று கூறும் எடப்பாடி, பன்னீர் அணியை அதிமுகவுடன் இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
சட்டமன்ற கூட்டம் நடப்பதால், அமைச்சர்கள் பலர் பன்னீரை எந்தவித இடையூறும் இன்றி நேரடியாகவே சந்தித்து அணிகள் இணைப்பு குறித்து பேசி வருகின்றனர்.
ஆனால், சசிகலா குடும்பம் அரசியலை விட்டு முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்பதில் பன்னீர் உறுதியாக இருப்பதால், தற்போதுள்ள நிலையில், அதை ஏற்க முடியாமல் தவித்து வருகிறார் எடப்பாடி.
இந்நிலையில், நெல்லையில் நேற்று நடந்த கூட்டத்தில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய பன்னீர்செல்வம், ‘ அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டவர்கள், ஜெயலலிதா மரணம் வரையில் கட்சியில் சேர்க்கப்படவில்லை என்றார்.
மேலும், அவர்கள் எல்லாம் தற்போது பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் ஆகும் அளவுக்கு கட்சியில் துப்பாக்கியை நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அத்தகைய கும்பலிடமிருந்து கட்சியைக் காப்பாற்றவே இந்த தர்ம யுத்தம் நடக்கிறது. ஜெயலலிதா மரணத்திலுள்ள மர்ம முடிச்சு அவிழும் வரை இந்த தர்மயுத்தம் தொடரும் என்றும் பன்னீர் கூறி விட்டார்.
பன்னீரும், எடப்பாடியும் இணைந்து செயல்படவேண்டும் என்றே டெல்லி மேலிடம் விரும்புகிறது. ஆனால், சசிகலா குடும்பம் முற்றிலும் ஒதுக்கப்படுவதை தினகரன் ஆதரவாளர்கள் விரும்பவில்லை.
அதனால், தேர்தல் ஆணைய தீர்ப்பு வரும் வரை, கொஞ்சம் அமைதியாக இருக்கலாம் என்றே எடப்பாடி நினைக்கிறார். அதன் காரணமாகவே, அமைச்சர்கள் மட்டுமே பேட்டி கொடுத்து வருகின்றனர்.
ஒரு வேளை, சசிகலா அதிமுகவின் பொது செயலாளர் ஆனது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் எடப்பாடி அமைதி ஆகி விடுவார்.
மாறாக, சசிகலா தேர்வு செல்லாது என அறிவிக்கப்பட்டால், அவர் விஸ்வரூபம் எடுப்பார் என்று எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைய கடுமையாக போராடி வரும் தினகரனை, எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என்று, எடப்பாடியை அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
தினகரன் மட்டும் கட்சி அலுவலகத்தில் புகுந்து விட்டால், சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாம், மீண்டும் அடிமை வலையில் சிக்கி கொள்ள நேரும்.
எனவே, எது நடந்தாலும், தினகரனை மட்டும் மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்க கூடாது என்று அமைச்சர்கள், முதல்வரை தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.