தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய தமிழகம் முழுவதும் இன்று காலையில் அதிமுகவினர் ஒரே நேரத்தில் கோவில்களில் விளக்கு பூஜை நடத்தினர்.

முதலமைச்சர் ஜெயலலிதா குணமடைய தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஒரே நேரத்தில் சிறப்பு வழிபாடு நடத்த வேண்டும் என ஆன்மீக குரு ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, சென்னை பெரியபாளையத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை மற்றும் கோமாதா தானம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக தென்சென்னை மாவட்டச் செயலாளர் வி.பி.கலைராஜன் கலந்து கொண்டு கோமாதா தானம் செய்தார்.
இதில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் உடல் நலம் பெற விளக்கேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அதிமுகவினர் சிறப்பு விளக்கு பூஜை செய்தனர்.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் ஆலயத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்பட அதிமுகவினர் ஏரளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள திருக்கோவில்களில் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.
இதேபோல், தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவாரூர், உள்பட தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அ.தி.மு.க.,வினர் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
