இப்போது ஆட்சி வரவில்லை என்று கவலைப்பட வேண்டாம். இந்த ஆட்சிக்கு ஒன்றரை வருடம் தான் ஆயுள். அதன்பிறகு மீண்டும் மக்களை போய் சந்திக்க வேண்டும். அடுத்த ஆட்சிக்கு வந்தால் தொடர்ந்து நிரந்தரமாக நம்முடைய ஆட்சிதான் இருக்க கூடிய நிலை ஏற்படும். 

அதிமுக ஆட்சி தானாக கவிழக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்தநாள் மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினார்கள். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேசியதாவது:


சென்ற ஆண்டு கருணாநிதியின் 95-வது பிறந்தநாளை திருவாரூரில் கொண்டாடினோம். அப்போது நான், ‘அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்ற தலைவர் அவர்களே, உங்களது சக்தியில் பாதியை எங்களுக்கு தாருங்கள்’ என்றேன். கருணாநிதி தந்தார். அந்தப் பாதி சக்தியைப் பெற்றுதான் 39 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று சாதனையைப் படைத்துள்ளோம். இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் உருவெடுத்துள்ளோம். இதற்கு காரணம், கருணாநிதியின் சக்தி தான். 
இந்தத் தேர்தலோடு திமுக கதை முடிய போகிறது. திமுக சந்திக்கும் கடைசி தேர்தல் இதுதான். ஸ்டாலின் கனவில் மிதக்கிறார் என்றெல்லாம் பெரிய தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ஆனால், தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பு, அவர்களுடிய கற்பனையில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.


இங்கு இருக்கக் கூடியவர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆட்சிக்கு எதிராக ஓட்டு போட்ட துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான வழக்கு தீர்ப்பு விரைவில் வரப்போகிறது. அது வருகிறபோது இந்த ஆட்சி இருக்குமா, இருக்காதா என்பது கேள்விக்குறி. தானாக கவிழக்கூடிய சூழல் உருவாகி இருக்கிறது. 
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.