2016-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 650 கோடி ரூபாய் கொட்டி அதிமுக வெற்றியைப் பெற்றதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுக ஆட்சியில் பணத்தை வாரி இறைத்து, ‘2016 தமிழக சட்டமன்றத் தேர்த’லையே லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிர்ச்சி தகவல்களை ஆங்கில இதழ் வெளியிட்டிருக்கிறது.
ஜனநாயகத்தின் குரல்வளையை முறித்துள்ள இந்த சதித் திட்டத்தை அதிமுகவின் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், இப்போது துணை முதலமைச்சராக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ‘கூட்டணி’ அமைத்து நடத்தியிருக்கிறார்கள்.


தி.மு.க.விடமிருந்து வெற்றியை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிப் பறிக்க, தமிழ்நாடு முழுவதும் அதிமுக வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தை, ‘எஸ்ஆர்எஸ் மைனிங்’ என்ற கம்பெனி மூலமே விநியோகம் செய்துள்ளதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைத்துள்ளது.
இந்தப் பணம் அனைத்தும் அதிமுக வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் தாராளமாக விநியோகம் செய்யப்பட்டு, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அடியோடு படுகுழிக்குத் தள்ளப்பட்டுள்ளது. வருமானவரித்துறை கைப்பற்றிய ஆதாரங்களில் சட்டமன்றத் தொகுதியின் பெயர்கள், வாக்குச்சாவடி விவரங்கள், ஆண் - பெண் வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்று இந்த மூன்று அமைச்சர்களும் குறித்து வைத்திருந்த கணக்குப் புத்தகங்கள், துண்டுத் தாள்கள், தயாரிக்கப்பட்டிருந்த ரகசிய பண விநியோகப் பட்டியல்கள் அனைத்தும் கிடைத்துள்ளன.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள வாக்காளர்களில் 70 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்த ஆதாரங்களை வருமான வரித்துறை கைப்பற்றியதோடு நடிகர் சரத்குமாருக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தது குறித்த கையெழுத்துடனான ஆதாரம் வருமான வரித்துறையிடம் பிடிபட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலையே அதிமுக ஆட்சி பணக் கட்டுகளை கொடுத்து பாழ்படுத்திய விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 2017-ம் ஆண்டு மே. 9 அன்றே அத்துறையின் முதன்மை இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்த ஆதாரங்களையும் தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படியும் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த முதன்மை இயக்குனரின் கடிதத்தின் மீது எடுத்து நடவடிக்கை என்ன? 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஆதாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என்பதெல்லாம் இதுவரை வெளியில் வராத மர்மங்களாகவே உள்ளன.
அதிமுக-வின் இமாலயத் தேர்தல் ஊழலை திரைமறைவில் வைத்துக்கொண்டு அதிமுக ஆட்சியுடன் மத்தியில் உள்ள பாஜக ஆட்சி நட்பு பாராட்டியது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. அதேபோல், ‘ஊழலை ஒழிப்போம்’ என நாடு முழுவதும் பேசிக்கொண்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, அதிமுக அரசின் ஒரு மிகப்பெரிய ஊழலுக்கும், ஜனநாயகப் படுகொலைக்கும் துணை போயிருப்பது அராஜகத்தின் உச்சகட்டம்.