இன்று அதிமுக செயற்குழு கூட்டம்... சூடு கிளப்புவார்களா இபிஎஸ் - ஓபிஎஸ் குரூப்..?
முதல்வர் வேட்பாளர், வழிகாட்டுதல் குழு போன்ற கோரிக்கைகளை துணை முதல்வர் ஓபிஎஸ் தரப்பு எழுப்ப உத்தேசித்துள்ள நிலையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டை கட்சி தலைமையகத்தில் இன்று காலை 9.45 மணி அளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 300 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்காக, கட்சி அலுவலகம் அருகே உள்ள திருமண மண்டபத்தையும் அதிமுகவினர் புக் செய்துள்ளனர். அங்கே செயற்குழு உறுப்பினர்களை அமர வைத்து பெரிய ஸ்கிரீனில் செயற்குழு கூட்டத்தை ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 19-ம் தேதி நடைபெற்ற கட்சியின் அவரச ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர், கட்சிக்கு வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. எனவே இன்றைய கூட்டத்திலும் இந்த இரு விவகாரங்கள் குறித்தும் சசிகலா வருகைப் பற்றியும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய செயற்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு தங்கள் பலத்தைக் காட்டும் முயற்சியில் ஈடுபடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.