அதிமுக துணை பொது செயலாளராக டிடிவி பொறுப்பேற்பு – அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை
கடந்த டிசம்பர் 5ம்தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்றனர்.
இதையடுத்து கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுக பிளவு பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சரணடைந்தார்.
முன்னதாக, கடந்த 15ம் தேதி கட்சியை வழி நடத்தவும், ஆட்சியில் சரிவு ஏற்படாமல் இருக்கவும் டி.டி.வி.தினகரன் அதிமுக துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அதிமுகவிர், சசிகலாவை பெங்களூர் சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதில் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடுவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்டவை குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இதில், துணை பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், தனது பதவியை பொறுப்பேற்று கொண்டு, அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார். துணை பொது செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன், அதிமுக தலைமை அலுவலகம் வந்தது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.