ADMK Carders give pressure to Leaders Against Edapadi Palanisami
முதல்வராக இருந்த ஜெயலலிதா, அந்த பதவியில் அமர முடியாத வகையில் சிக்கல் வந்த இரண்டு தடவையும், அந்த பொறுப்பை பன்னீர்செல்வத்திற்கே அளித்தார்.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு ஏற்றார் போல செயல் பட்டு, அவரது நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார் பன்னீர்.
ஆனால், ஜெயலலிதா இறந்த பிறகு, மற்றவர்கள் வலியுறுத்துவது போல செட் அப் செய்து கட்சியின் பொது செயலாளர் ஆனார் சசிகலா.
அவர் பொது செயலாளர் ஆன உடனேயே, பன்னீரை அவரது ஆதரவு அமைச்சர்கள் மூலம் எந்த அளவுக்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அவமானப்படுத்தினார்.
அது போதாதென்று, ஒரு முதல்வராக சுயமரியாதையுடன் சாதாரண முடிவை கூட எடுக்க முடியாமல் தவிக்கும் அளவுக்கு, சசிகலாவே அவமானப்படுத்தினார்.

இவ்வளவு அவமானங்களையும் தாங்கி கொண்டு புன் சிரிப்புடன் தமது பணியை முடிந்த வரை செய்து வந்தார் பன்னீர்செல்வம்.
ஆனால், அமைச்சர்கள் ஒத்துழைப்பு கொடுக்காத நிலையிலும், வார்தா புயல் நிவாரண பணிகளில் அவர் செயல் பட்ட விதம், ஆந்திர முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தி கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வந்தது, மத்திய அரசுடன் இணக்கமாக பேசி ஜல்லிக்கட்டு சட்டத்தை நிறைவேற்றியது ஆகியவை, பன்னீருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது.
ஆனாலும், அவர் சசிகலாவுடன் இருந்ததால் மக்கள் அதை பெரிதாக பேசவில்லை. அதன் பிறகு, அவர் சசிகலாவை எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியதும்தான், அவருக்கு மக்களின் ஆதரவு பெருகியது.
மக்களிடம் கிடைத்துள்ள நல்ல பெயரை தக்க வைத்து கொள்வது மட்டும் அவருடைய கடமை அல்ல. அதிமுகவில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மக்கள் மன்றத்தில் முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தலைவர்களே இல்லை.
அந்த வெற்றிடத்தை பன்னீரால் மட்டுமே ஓரளவு நிரப்ப முடியும். அதனால், சசிகலா சொன்ன காரணத்தை மீண்டும் நினைவு கூர்ந்து, முதல்வர், பொது செயலாளர் என்ற இரண்டையும் பெற்றால் மட்டுமே கட்சியை தொடர்ந்து வழி நடத்த முடியும்.
அப்படி இல்லாமல், முன்பு போல வெறும் முதல்வர் பதவியில் மட்டுமே இருந்தால், பொது செயலாளர் பதவியில் இருப்பவர்களின் வழியாக, மீண்டும் சசிகலா உறவுகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விடும்.
ஆகவே, முதல்வர் பதவி மட்டும் அல்ல, பொது செயலாளர் பதவியையும் எடப்பாடிக்கு விட்டு தராமல் இருப்பதே நல்லது என்று அதிமுக தொண்டர்களும் கூற ஆரம்பித்து விட்டனர்.
