அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் வெளிபாடே ஐடி ரெய்டு.. அலறும் கி.வீரமணி..
திமுக மீது வருமான வரித்துறையை ஏவிவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும், தி.மு.க.விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திமுக மீது வருமான வரித்துறையை ஏவிவிடுவது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும், தி.மு.க.விற்கு இத்தேர்தலில் வெற்றி உறுதி எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம்: அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைவது உறுதியிலும் உறுதியாகும் நிலையில், பா.ஜ.க. - அ.தி.மு.க.வின் ஒரே ஆயுதமான வருமான வரித் துறை சோதனை என்ற அச்சுறுத்தலை - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் மகள் திருமதி செந்தாமரை சபரீசன் இல்லம் மற்றும் சில தி.மு.க. வேட்பாளர்களைக் குறி வைத்து இன்று (2.4.2021) வருமான வரித்துறையினரை ஏவிவிட்டுள்ளனர். இதன் உண்மை நிலையை வாக்காளப் பெருமக்களாகிய பொதுமக்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
இந்த அரசியல் பழிவாங்கும் அச்சுறுத்தல்களால் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வீசும் ஆழிப்பேரலையை ஒருபோதும் தடுத்துவிட முடியாது! முன்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கைப்பற்றப்பட்ட அ.தி.மு.க. அமைச்சரின் டைரி, அதில் இருந்த குறிப்புகள்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இப்பொழுதும் ஆங்காங்கே அ.தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து செய்திகள் வந்த வண்ணமே உள்ளன.
வருமான வரித் துறையை ஏவிவிடும் நடவடிக்கைகள் தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உரம் போடுவதாகுமே தவிர, அவர்களது வெற்றியை ஒருபோதும் தடுக்காது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியின் தோல்வி பயத்தின் உச்சம்தான் இது! இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்! என அதில் கூறப்பட்டுள்ளது.