இருகட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று மாலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதிமுக கூட்டணியில் பாமக நீடிப்பது உறுதியாகியுள்ளது. ஆனால் தேமுதிக - அதிமுக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால் கூட்டணியை விட்டு வெளியேறு எண்ணத்திற்கு தேமுதிக வந்துவிட்டதாக கூறப்பட்டது. தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை சமீபத்தில் நிறைவடைந்தது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 12 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தங்களுக்கு 20 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என தேமுதிக கறார் காட்டி வந்தது. அதன் பின்னர் அமைச்சர் தங்கமணி இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகளான அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருகட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று மாலை நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக பங்கேற்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் தேமுதிக கொடுத்த இரண்டு ஆப்ஷன்களையும் அதிமுக ஏற்க மறுத்தது தான் எனக்கூறப்படுகிறது. அதாவது பாமகவிற்கு ஒதுக்கியதைப் போல் தங்களுக்கும் 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும், இல்லையெல் 20 தொகுதிகளுடன் சேர்த்து ஒரு நாடாளுமன்ற தொகுதியையும் தர வேண்டும் என்றும் தேமுதிக கறார் கேட்டுள்ளது. ஆனால் அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 14 சீட்டுக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் அதிமுக - தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அதிமுகவில் இருந்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோரும், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர். 


தேமுதிகவின் வாக்கு வங்கி தொடர்ந்து குறைந்து வருவதும், விஜயகாந்த் தேர்தல் பரப்புரையில் முழுவீச்சில் ஈடுபட முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி அதிமுக தொகுதிகளை குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்தும், சுதீஷும் பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக பங்கேற்றுள்ள நிர்வாகிகள் பேச்சுவார்த்தை குறித்து அவர்களுடன் ஆலோசிப்பார்கள் என்றும், ஒருவேளை அதிமுக கூட்டணியில் நீடிக்க தேமுதிக ஒப்புக்கொண்டால் நாளை மாலை தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.