ஜெ., காலத்தில் அமாவாசை நெருங்கினாலே அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட கழகத்தினருக்கு தலைசுற்றல், நடுக்கமெல்லாம் வந்துவிடும்

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா கோலோச்சிய காலத்தில் எல்லாவற்றையும் சாத்திர சம்பிரதாயங்களைப் பார்த்தே செய்வார். கட்சியின் முக்கிய கொள்கை முடிவுகள் அறிவிப்பு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை அறிவிப்பு என்று துவங்கி எல்லாவற்றையுமே மிக மிக பெரும்பாலும் ‘அமாவாசையின் வளர்பிறை நாளில்’தான் செய்வார். ஏனென்றால் அதன் மூலம் வளர்ச்சி கிடைக்கும், பாஸிடீவ் ரிசல்ட் கிடைக்கும் என்பது அவரது தளராத நம்பிக்கை. அதுவும் மிக மிக அதிகமான சமயங்களில் ஈடேறியே உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அது மட்டுமல்ல, புகார்கள் நிரூபணமாகும் மாவட்ட செயலாளர்களையோ, அமைச்சர்களையோ பதவியிலிருந்து அவர் தூக்கிவிட்டு புதிய நபர்களை அதில் உட்கார வைக்கும் அறிவிப்பையும் அமாவாசை வளர்பிறையில்தான் செய்வார். அதனால் ஜெ., காலத்தில் அமாவாசை நெருங்கினாலே அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அக்கழகத்தினருக்கு தலைசுற்றல், நடுக்கமெல்லாம் வந்துவிடும்.

ஜெ., மறைவுக்கு பின் எடப்பாடியாரும், ஓ.பன்னீர்செல்வமும் கூட இந்த அமாவாசை வளர்பிறை நாளில் கட்சிக்கான முக்கிய திருப்புமுனைகளை அறிவிப்பது, முடிவெடுப்பது போன்ற காரியங்களை செய்கின்றனர். அவர்கள் ‘அமாவாசைன்னா அ.தி.மு.க.வுக்கு வெற்றிதான்’ எனும் சென்டிமெண்டை வைத்துள்ளனர்.

ஆனால் அதற்காக அதைக் கொண்டு போய், முதல்வர் ஸ்டாலினை திட்டும் விஷயத்திலெல்லாம் எடப்பாடியார் யூஸ் பண்ணுவதுதான் ஓவர் ஓவர் ஓவரோ ஓவர்! என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது இன்னும் 27 அமாவாசைக்கு பின் தி.மு.க. ஆட்சி இருக்காது! என்று தடாலடி சவாலும், சாபமும் விட்டிருக்கிறார் எடப்பாடியார். ’அதென்ன அமாவாசை கணக்கு?’ என்று கேட்டால், ‘எல்லாம் வழக்கமான அ.தி.மு.க. சென்டிமெண்ட் கணக்குதான்’ என்கிறார்கள். ‘அமாவாசையை கையிலெடுத்து அடிக்கடி தாக்கினால் தி.மு.க. பலவீனமடையும். தொடர்ந்து இதை செய்து கொண்டே இருக்கையில் தொடர்ந்து அதன் பலம் குறைந்து அடுத்த சட்டமன்ற தேர்தலின் மூலம் தமிழகம் மீண்டும் அ.தி.மு.க.வின் கையில் இருக்கும்.’ என்று எடப்பாடியார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க.வினருக்கு மிக நெருக்கமான ஜோதிடர் தொடர்ந்து அறிவுரை கூறி வருகிறாராம். அதனாலேயே எடப்பாடியார் இப்படி பேசுகிறார்! மற்ற அ.தி.மு.க. நிர்வாகிகளும் இப்படி பேசுவார்கள்! என்கிறார்கள்.

இதற்கிடையில் மாஜி துணை சபாநாயகரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெயராமன் ஏற்கனவே ‘இன்னும் பத்து அமாவாசைக்கு கூட தி.மு.க. அரசு தாங்காது’ என்று ஒரு கணக்கை போகிற போக்கில் போட்டுவிட்டு சென்றார்! என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் அவர் சொன்ன பத்து அமாவாசை கழிந்தே பல நாட்கள் ஆகிவிட்டது!

இந்நிலையில் அ.தி.மு.க.வின் இந்த அமாவாசை சென்டிமெண்ட் தாக்குதலுக்கு பதிலடி தரும் தி.மு.க.வின் ஐ.டி.விங்கோ “எத்தனை ஜென்மமானாலும் திருந்தாத இயக்கம் அ.தி.மு.க. சாதுர்யமான அரசியல், மக்கள் நல திட்டங்கள், களப்பணி இதையெல்லாம் விட்டுட்டு ஜோஸியம், ஜாதகம், பணிக்கர் வாக்குன்னு அலையுறதே இவங்க பொழப்பு. 27 அமாவாசையல்ல இன்னும் 27 லட்சம் அமாவாசைகளுக்குப் பிறகும் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மட்டுமே தான்.” என்கிறார்கள்.

ப்பார்றா!